தந்தையும் மகளும்/80

விக்கிமூலம் இலிருந்து


80அப்பா! சோப்பு குமிழிகள் முதலில் மேலே செல்லுகின்றன, பிறகு கீழே வந்து விடுகின்றன, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நீ சோப்பை நீரில் கரைத்து அதில் மெல்லிய குழாய் மூலம் ஊதும்போது சோப் குமிழிகள் உண்டாகின்றன. குமிழியில், மேலே சோப்பு நீர்த்தோலும் உள்ளே . நீ ஊதிய காற்றும் இருக்கிறது. நம்முடைய உடம்பிலிருந்து சுவாசத்தின் மூலமாக வெளியே வரும் காற்று எப்பொழுதும் வெளியிலுள்ள காற்றைவிட உஷ்ணமானது. உஷ்ணமான காற்று உஷ்ணம் குறைவான காற்றை விடக் கனம் குறைந்தது, ஆதலால் சோப்புக் குமிழியிலுள்ள காற்று மேலே செல்லுகிறது. அது செல்லும் போது சோப்பு நீர்த்தோலையும் தன்னுடன் கொண்டு செல்லுகிறது.

ஆனால் அந்தத் தோல் மிகவும் மெல்லிய தல்லவா? அதனால் அதனுள் உள்ள காற்று சீக்கிரமாகக் குளிர்ந்து விடுகிறது. அதனால் அது சோப்பு நீர்த் தோலை தூக்கிக் கொண்டு மேலே செல்ல முடியாமல் போகிறது. ஆதலால் தான் மேலே சென்ற சோப்புக் குமிழிகள் சிறிது நேரம் சென்றதும் கீழே வந்துவிடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/80&oldid=1538230" இலிருந்து மீள்விக்கப்பட்டது