திருவாசகம்/திருவுந்தியார்

விக்கிமூலம் இலிருந்து

திருஉந்தியார் - ஞான வெற்றி

(தில்லையில் அருளியது- கலித்தாழிசை)

    வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
    உளைந்தன முப்புரம் உந்தீபற
    ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295

    ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
    ஓரம்பே முப்புரம் உந்தீபற
    ஒன்றும் பெருமிகை உந்தீபற. 296

    தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
    அச்சு முறிந்ததென் றுந்தீபற
    அழந்தன முப்புரம் உந்தீபற. 297

    உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண்
    டெய்யவல் லானுக்கே உந்தீபற
    இளமுலை பங்கனென் றுந்தீபற. 298

    சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
    ஓடிய வாபாடி உந்தீபற
    உருந்திர நாதனுக் குந்தீபற. 299

    ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
    சாவா திருந்தானென் று தீபற
    சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 300

    வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய
    கையைத் தறித்தானென் றுந்தீபற
    கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 301

    பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
    பார்ப்பதென் னேயேடி யந்தீபற
    பணைமுலை பாகனுக் குந்தீபற. 302

    புரந்தர னாரொரு பூங்குயி லாகி
    மரந்தனி லேறினார் உந்தீபற
    வானவர் கோனென்றே உந்தீபற. 303

    வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
    துஞ்சிய வாபாடி உந்தீபற
    தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 304

    ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
    கூட்டிய வாபாடி உந்தீபற
    கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. 305

    உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே
    கண்ணைப் பறித்தவா றுந்தீபற
    கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. 306

    நாமகள் நாசி சிரம்மி மன்படச்
    சோமன் முகன் நெரித் துந்தீபற
    தொல்லை வினைகெட உந்தீபற. 307

    நான்மறை யோனும் அகத்திய மான்படப்
    போம்வழி தேடுமா றுந்தீபற
    புரந்தரன் வேள்வியி லுந்தீபற. 308

    சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
    வாரி நெரித்தவா றுந்தீபற
    மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 309

    தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன்
    மக்களைச் சூழநின் றுந்தீபற
    மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 310

    பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
    கோலச் சடையற்கே யந்தீபற
    குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 311

    நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
    ஒல்லை யரிந்ததென் றுந்தீபற
    உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 312

    தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம்
    ஈரைந்தும் இற்றவா றுந்தீபற
    இறுபதும் இற்றதென் றுந்தீபற. 313

    ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
    ஆகாசங்காவலென் றுந்தீபற
    அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. 314

    திருச்சிற்றம்பலம்