பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவர் சிந்திய இரத்தம்

41



கிடந்தனரேயொழிய, "ஐயன்மீர்! உமக்குள்ள ஆற்றலிலே ஆயிரத்திலோர் பாகமேனும் செலவிட்டால். இந்த ஆங்கிலேயன் மிரண்டோடுவானே, அதைச் செய்யலாகாதா என்று கேட்கவில்லை அவர்களின் ஆற்றலோ, அல்லது "கால தேச வர்த்தமானத்திலோ" ஆங்கிலேயன், எப்போதுதான் போய்த் தொலைவான் என்பதைக் கூறும்படி ஆற்றல் மிக்க ஆரூடக்காரனையும், மக்கள் கேட்டதில்லை. அவர்களும் மீனாவுக்கும் முத்துவுக்கும் பொருத்தம் பார்ப்பது, மேஷ ரிஷபக் கணக்குக் கூறுவது என்று கூறிக்கொண்டிருந்தார்களேயொழிய, கிரிப்ஸ் திட்டம், புதிய சட்டம் என்ற இவைப் பற்றி ஏதும் கணக்கெடுத்துக் கூறினதில்லை.

அவர்களெல்லாம் அன்னிய ஆட்சியைத் தடுக்க முடியாமலும், போக்கியாக வேண்டுமே என்று எண்ணாமலும் இருந்தனர் என்றாலும், மக்கள், அவர்களிடம் வழக்கப்படி, மரியாதை காட்டியும், காணிக்கை செலுத்தியும்; பயபக்தி விசுவாசத்தோடும் இருந்துவந்தனர்,

இவர்களின் கண் முன்னாவே, வெள்ளைக்காரர்கள் உலவினர் -- இவர்கள் அக்காட்சியைக் கண்டு நமது ஆற்றல் பயனற்றுப் போயிற்றே என்று வெட்கித் தலை குனியவுமில்லை -- தங்களிடம், மக்கள் எவ்வளவு மரியாதை காட்டுகிறார்கள் என்பதை அன்னியனுக்குக் காட்டி, உனக்கு ஒருவகையிலே செல்வாக்கு, எங்களுக்கு மற்றோர் வகையிலே என்று கூறிக் கொள்ளும் முறையிலேயே நடந்துகொண்டனர். மக்களோ நம்மை ஆண்டு ரட்சிக்க, பலபேர் உள்ளனர்; அவர்களிலே ஆங்கிலேயனும் ஒருவன்போலும் என்று எண்ணிவிட முடிந்ததேயொழிய, இவ்வளவு ஆற்றல் படைத்த இவர்கள், ஏன் இன்னோர் அதிகாரியை அனுமதித்தனர் என்று சிந்தித்து, உண்மையில் இவர்களுக்கு ஆற்றல் இல்லை என்ற முடிவு செய்யவில்லை. சிந்திக்க இடந்தரவில்லை, பழக்கம். எனவே, அன்னிய ஆட்சி ஏற்பட்டதைத் தடுக்கமுடியாத சக்திகள் அள்னிய ஆட்சியின்போதும் மக்களை மட்டும், எப்போதும்போலவே, ஆதிக்கம் செலுத்திவந்தன.