பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100


பெண்களின் உறுதி கண்டு மகிழ்ந்தான் குசநாபன். அவர்களைப் பாராட்டினான். பிரமதத்தன் என்பவனுக்கு அவர்களைத் திருமணம் செய்து கொடுத்தான்.

பிரமதத்தன் என்பவன் சூளி எனும் முனிவருக்கும், சோமதை எனும் கந்தருவப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவன். அவன் தொட்ட உடனே பெண்கள் கூன் நீங்கப் பெற்றார்கள்; அழகுடன் விளங்கினார்கள்.

பிறகு குசநாபன் தனக்குப் பின் அரசாள ஒரு மகனை வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். ஓர் ஆண் மகவு பெற்றான். அவனுக்குக் காதி என்று பெயரிட்டான். உரிய காலத்தில் அவனுக்கு முடி சூட்டி அரசனாக்கினான்; பின் பிரம்மலோகம் சென்று விட்டான்.

காதிக்கு ஒரு பெண்ணும் ஓர் ஆணும் பிறந்தனர். பெண்ணின் பெயர் கெளசிகி; ஆணின் பெயர் கெளசிகன்.

அந்தக் கெளசிகியை இருசிகன் என்பவனுக்கு மணம் செய்து கொடுத்தான் காதி.

இருசிகன் என்பவன் பிருகு முனிவரின் புதல்வன். இவன் சிலகாலம் கெளசிகியுடன் இல்லறம் நடத்தினான். பிறகு தவம் செய்து பிரும்மலோகம் சென்றான். தனது கணவனின் பிரிவு ஆற்றாதவளாகி கெளசிகி ஓர் ஆறாகி அவனைப் பின் தொடர்ந்தாள்.

”இந்நதி வடிவிலே பூமியில் இருந்து மக்களின் பாவங்களைப் போக்கி பூமியை வளம் செய்வாயாக" என்று கட்டளையிட்டுச் சென்றான் அவளது கணவன், இருசிகன்.

“அன்று முதல் இப்படி ஆறாக ஓடுகிறாள் எனது தமக்கையாகிய கெளசிகி” என்று கூறினார் விசுவாமித்திரன் என்ற கெளசிகர்.