பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அக்டோபர் 18
ஆசைகளற்ற வாழ்க்கையை இறைவா, அருள் செய்க!

இறைவா, உடல் அரிப்புப் போன்றது அவா! ஆசை! அரிப்புக்குச் சொறிந்தால் முதலில் இதம்! அரிப்பு நிற்குமா? நிற்காது. தொடர்ந்து சொறிந்தால் புண்! ஆம், இறைவா! அதுபோல ஆசையை நிறைவேற்ற முயன்றால் ஆசை வளரும்!

மேலும் மேலும் வளரும், வெள்ளம் போல் புதிய புதிய ஆசைகள்! இந்த ஆசைகளை நிறைவேற்ற முயன்றால் உடல் வருத்தம்! அவமானம்! துன்பம்! இப்படித்தான் போகும்!

இறைவா, ஆசைகள் இல்லாத அருள் வாழ்வை உன்னிடம் யாசிக்கின்றேன். என்னுடைய நல் வாழ்க்கைக்குப் பகையாகிய ஆசை வேண்டாம். சின்னதில் கூட ஆசை வேண்டாம். வேண்டவே வேண்டாம்.

துரும்பைக் கூட நான் ஆசைப்பட்டு அடையக் கூடாது. இறைவா! ஏன் உன்னிடத்திற்கூட எனக்கு ஆசை கூடாது. ஆம், இறைவா! ஆசையற்ற வாழ்வைக் கொடு.

அன்பு செய்ய ஆசைப்படுகிறேன்! நினக்கு ஆட்செய்ய ஆசைப்படுகிறேன்! ஆசையை ஒழிக்க வேறொரு ஆசை தேவைப்படுகிறது. ஆனால், அவல ஆசைகள் வேண்டாம். இறைவா, அருள் செய்க!

ஆசைகளற்ற அருள் வாழ்க்கையை, பாசங்கள் நீங்கிய புகழ் வாழ்க்கையை, அன்பே நிறைந்து வழியும் புண்ணிய வாழ்க்கையை அருள் செய்க! இறைவா, அருள் செய்க!