பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

309




அக்டோபர் 19


ஞானம் வழங்கிய வள்ளலே! வாழ்க, நின் கருணை!


இறைவா, குருவாக எழுந்தருளிக் காட்டாமற் காட்டியும், சொல்லாமற் சொல்லியும் ஆட்கொண்டருளும் இறைவா! நின் கருணையை எங்ஙனம் வாழ்த்துவேன்.

இறைவா, ஆலமர் செல்வா! தெய்வ சிகாமணித் தேவனாய் எழுந்தருளிய என் ஞானமுதலே! "நான் யார்” என்றுணர்த்திய நாயகமே!

எனது உள்ளம் எத்தகையது? யாருக்கு, எதற்கு உரிமைப்படுத்தப் பெற்றுள்ளது? என்று உணர்த்தி-முன்னைச் சார்பு விட்டகன்று நின் திருவடியே சார்பு என்று அடைக்கலமாகி நிற்கும் எளியேனை-ஒரு சொல்லில் ஆட்கொள்!

ஞானம், எதுவென அறியாது கிடந்த என்னை, எடுத்தாண்டு ஞானத்தினை வழங்கும் ஞானத்தின் திருவுருவே! நின் கருணைக்கு ஏது கைம்மாறு?

இறைவா, நான் அறிந்தேன், 'நான்' கெட ஒழுகுவேன். இனி என் உள்ளம் உன் வசமே. என் வசமன்று. ஞானம் - திருவடி ஞானம்! நன்றே செய்யும் ஞானத்தினை வழங்குக. இன்ப அன்பினை வழங்கும் ஞானத்தினை அருள் செய்க!

"நான்” அறியச் செய்த குருவே போற்றி உள்ளங்கவர் தலைவா, போற்றி! ஞானத்தின் தலைவனே! எளியேனுக்கு ஞானம் வழங்கிய வள்ளலே! வாழ்க நின் கருணை! போற்றி, போற்றி!