88
ஞாயிறும் திங்களும்
செந்தமிழைக் காப்பதற்குச் சீறி எழுந்தவர்கள் வெந்தழலை மூட்டி விறகாக்கித் தம்முடலை வேகவிட்ட வீரப்பன் வீரன் சிவலிங்கம் போகவிட்ட நல்லுயிரால் போற்றும் கழகமடா : நாம்வணங்கும் சின்னமென ஆன திருச்சாமி தேமொழியைக் காக்கவரும் சென்னை அரங்கனவன் மூண்டெழுந்த செந்தழலில் மூழ்கி மடிந்தார்கள் ஆண்டவர்தம் ஈகத்தால் ஆல்போல் வளர்ந்ததடா! அந்தக் கழகத்தை ஆரழிக்க வல்லார்கள்? சிந்தைத் துயர்நீங்கிச் செம்மாந்து நிற்பாய்! இரங்கும் இயல்புடைய என்றன் மனத்தை இரவல் எனப்பெற்றான் என்தம்பி ஆரூரன் ; நம்மை உருவாக்க நாளெல்லாம் பாடுபட்ட செம்மை திறம்பாத ஈரோட்டுச் சிங்கத்தின் நெஞ்சத் துணிவும் நிரம்பஅவன் பெற்றுள்ளான் அஞ்சற் கிடமில்லை அன்னான் துணையாய்நில்! என்புருவம் ஆனாலும் ஏறு நிகர்மனத்தன் அன்பழகன் எல்லாம் அவற்குத் துணையுண்டு ; நாட்டை வளமாக்க நல்லசில திட்டங்கள் போட்டிருந்தேன் என்மனத்தில் பொல்லாப் பிணிவந்து வாட்டியதால் தம்பியரை வாடவிட்டுச் சென்றுவிட்டேன் போட்டிருந்த திட்டம் புரிந்தகரு ணாநிதியும் ஒன்றுங் குறையா துருவாக்கிக் காட்டுகிறான் நன்று தரும்முடிவை நன்காய்ந்து செய்கின்றான் பண்டைத் தமிழ்நாட்டைப் பார்த்து மகிழுமுளம் கொண்டே முயல்கிறான் கொள்கை குறிக்கொண்டான் உன்னை உடன்பிறப்பென் றுள்ளத்திற் கொண்டுள்ளான் என்னை அவனுருவில் என்றும்நீ கண்டிடுவாய்" என்றமொழி எல்லாம் இனிதுரைத் தென்முன்னே நின்றவனைக் காணவிலை ; நெஞ்சந் துடிதுடித்(து)அண்ணா எனஅலற அருகில் துயில்மனையாள் உண்ணா தயர்ந்தீர் உறக்கத்தும் இந்நினைவா? சொன்னால் கேட்பதில்லை ; சொக்கி உறங்கிவிட்டீர்! என்றாள் விழிமலர்ந்தேன்; என் அண்ணன் சொன்னவற்றை பாட்டில் எழுதிவந்து பாடி முடித்துவிட்டேன் கேட்டோரே அண்ணன் கிளந்தவெலாம் நெஞ்சிருத்தி நாட்டை வளமாக்க நாடித் துணைநிற்பீர்!
பாட்டை முடித்தே பணிந்து.
6-9-1974