பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

திருக்குறள்


செய்ய முன் வந்து தொடங்கி, அந்தச் செயல் முடிவதற்கு முன் இடையிலேயே அழிந்து ஒழிந்தவர் பலர் ஆவர்.

உடைத்தம் வலி-தம்முடைய வலிமை; ஊக்கி-செய்யத் தொடங்கி; இடைக் கண்-இடையிலே;; முரிதல் -கெட்டு ஒழிதல். 473

4.அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

தனக்கு இயல்பாக அமைந்துள்ள வலிமைக்கு ஏற்றபடி நடவாமலும், தன் வலிமையின் அளவையும் உள்ளபடி உணர்ந்து கொள்ளாமலும், தன் வலிமையைக் குறித்துத் தானே பெருமைப் பட்டுக் கொண்டிருப்பவன் விரைவில் கெட்டு அழிவான்.

அமைந்தாங்கு-தனக்கு இயல்பிலே அமைந்துள்ளபடி; ஒழுகான்- நடவாதவன்; வியந்தான்-தன்னைத் தானே பெரிதும் மதித்துக் கொள்பவன். 474

5.பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

மெல்லிய மயில் இறகு ஏற்றிய வண்டியாக இருந்தாலும், அந்த மயில் இறகுச் சுமையினை வலிமை வாய்ந்த அந்த வண்டியின் மீது அளவு கடந்து மேன் மேலும் ஏற்றினால், முடிவில் அந்த வண்டியின் அச்சு முரியும்.

வலிமையில்லாதவர் மிகப் பலராக இருப்பின், மிகவும் வலிமை பெற்ற ஒருவனையும் ஒழித்து விடக் கூடும் என்பது பொருள்.

பீலி-மயில் இறகு; சாகாடு-சகடம், வண்டி; அச்சு-வண்டியின் சக்கரம் கோக்கப்படும் மரம்; சால மிகுத்து-மிகவும் அதிகமாக; பெயின்-ஏற்றினால். 475

6.நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்.

ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறி நிற்பவர், அதையும் கடந்து அதற்கு அப்பாலும் ஏறி நிற்க முனைந்தால், அம்முயற்சி அவர்தம் உயிருக்கே முடிவினைக் கொண்டு வந்து விடும்.