138
திருக்குறள்
54. பொச்சாவாமை
1.இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
அளவு கடந்த கோபம் ஒருவனுக்கு மிகவும் தீமையினை விளைவிக்கும். அதனினும் தீமையைத் தரத் தக்கது ஒன்று உண்டு. அஃதாவது, மிகுந்த மகிழ்ச்சிக் களிப்பினால் உண்டாகும் மறதியேயாம்.
பொச்சாவாமை-மறவாமல்இருத்தல்; பொச்சாப்பு-மறதி; இறந்த வெகுளி-அளவு கடந்த கோபம்; உவகை மகிழ்ச்சி-மிக்க மகிழ்ச்சியால் வரும் களிப்பு, பேரானந்தம்; சோர்வு-மறந்திருக்கும் தன்மை, மறதி. 531
2.பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
நாள் தோறும் துன்பத்தைத் தரும் தரித்திரம் ஒருவன் அறிவினை முற்றிலும் கெடுக்கும். அது போல மறதி ஒருவன் புகழினை அடியோடு அழித்து விடும்.
கொல்லும்-முற்றிலும் கெடுத்து விடும்; நிச்ச நிரப்பு-நித்திய தரித்திரம்; நிரப்பு-தரித்திரம். 532
3.பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
உள்ளச் சோர்வால் மறதி உடையவர்கட்கும் புகழுடன் வாழும் வாய்ப்பு இல்லை. இது நீதி நூலாரின் கொள்கை மட்டும் அன்று; பல வகைப்பட்ட கொள்கையினையுடைய நூலாசிரியரும் இதே கொள்கையுடையராவர்.
புகழ்மை-புகழுடன் வாழும் தன்மை; எப்பால் நூலோர்- எப்படிப் பட்ட கொள்கையுடைய நூலாசிரியர்களும்; துணிவு-ஒப்ப முடிந்த கொள்கை, முடிவான கொள்கை. 533
4.அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
காடு, மலை முதலிய அரண்களுக்கு நடுவே இருந்தாலும், மனத்தில் அச்சத்தையுடையவர்களுக்கு அந்த அரண்களால் எந்த விதமான பயனும் இல்லை. அது போலப்