522
திருக்குறள்
1303. அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் றம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்
என்பது, பரத்தைய ரிடத்தினின்றும் வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது:
தம்மைச் சேராமல் வாடி யிருக்கிற ஸ்திரீகளைப் பிணக்கு நீக்கக் கூடாமல் புருஷர்கள் செல்லுதல் முன்னே துக்கப்பட்டுக் கெட்டவர்களைப் பின்னையும் வெகு துக்கங்களைச் செய்வித்தாற் போலும் என்றவாறு. ௩
1304. ஊடி யவரை யுணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று
என்பது இதுவுமது
பிணங்கி யிருக்கிற பரத்தையரைப் பிணக்குத் தீர்த்துக் கலவி செய்யாதொழிதல், தண்ணிரில்லாமல் வாடுகிற கொடியை வேரறுத்த தோடொக்கும் என்றவாறு. ௪
1305. நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து
என்பது, தலைமகளைப் பிணக்கு நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது:
நற்குணங்களையே யுடைய தலைவர்க்கும் அழகாவது, பூவைப் போன்ற கண்களையுடைய நாயகிகளின் நெஞ்சிலே உண்டாகிற பிணக்கு மிகுதியன்றே என்றவாறு. ௫
1306. துணியும் புலவியு மில்லாயிற் காமம்
கனியுங் கருக்காயு மற்று
என்பது இதுவுமது
முதிர்ந்த பிணக்காகிய கோபமும் இளைய பிணக்காகிய புலவியும் இல்லாவிட்டால், காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும் என்றவாறு.