148
பத்திமைப் பாடலறாத ஆவூர்ப் பசுபதியீச்சரம்
பாடுநாவே (திருஞானசம்பந்தர் 1-8-2)
பத்தனாய்ப் பாடமாட்டேன் (அப்பர் 4-23-1)
அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ்பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்
(சேக்கிழார் தடுத்தாட்கொண்ட-70)
பாடும் பணியே பணியா யருள்வாய் (கந்தரநுபூதி-1)
என வரும் அருளாசிரியர்கள் வாய்மொழிகள் இத்தகைய பத்திமைப் பாடற்றொண்டின் சிறப்பினை வற்புறுத்துவன ஆகும். இவ்வாறு இறைவனுடைய மெய்யான புகழ்த் திறங்களை இனிய பாடல்களில் அமைத்துப் பாடிப் போற்றுதல் என்பது இறைவன் அருள்பெற்றார்க்கன்றி ஏனையோர்க்கு உலகியற் புலமையால் மட்டும் எளிதில் இயலாத தொன்றாம். உலகியற் புலமையை மட்டும் கொண்ட புலவர்கள் பாடும் செய்யுட்களிலெல்லாம் சிந்தையால் அளவுபடாத இறைவனது புகழ்த்திறங்கள் அடங்கிவிடுவன அல்ல. “அவனருளாலே அவன்றாள் வணங்கி” என்றவாறு இறைவனது திருவருள் தூண்டுதலின்பயனாக அம்முதல்வன்பால் பேரன்புடைய பத்தி நலம் வாய்ந்த பெருமக்கள் பாடிய பாடல்களே இறைவனது அருளின்நீர்மையை உலக மக்கள் உள்ளத்தால் உணர்ந்துபோற்றும்படி விரித்துரைக்கவல்ல ஆற்றல் வாய்ந்தனவாகும். எல்லாம் வல்ல இறைவனது திருவருட் கடலில் படிந்து சைவநெறி உலகேழும் பாலிக்கும் தகைமையினால் தெய்வநெறிச் சிவம் பெருக்கிய திருநாவுக்கரசர், இயல் இசைத்தமிழாகிய பத்திமைப் பாடல்களால் பாடுமாறு தம்மை உள்நின்றுபாடச்