சுரதாவின் தேன்.மழை 246 நிபுணன் எனுஞ்சொல் நிச்சயம் வடசொல் நண்பனே வல்லவன் என்பதே நம்சொல் சபதம் என்பது வடமொழிச் சத்தம் வஞ்சினம் என்பதே மணித்தமிழ் ஓசை அபிமானம் என்பதோ ஆரிய வார்த்தை பற்றென் பதுவே பால்வாய்ப் பசுந்தமிழ் உபநதி என்பதோ ஒடோடி வந்த சொல் கிளையா றென்பதே இளமைத் தமிழ்ச்சொல் ! சூலம் என்பது சுநீதியின் தாய்மொழி வேலென் பதுவே வெண்குத்தி யார்மொழி பாலகன் என்பது பாஞ்சாலி வார்த்தை குழந்தை என்பதே குமணன் மனைவிசொல் கேலி என்பது கிரீடியின் மனைவிசொல் பகடி என்பதே பரணர் மனைவிசொல் ஆலயம் என்பதே அநமித்ரன் மனைவிசொல் கோயில் என்பதே குளம்பனார் மனைவிசொல். சகசம் என்பது தசரதன் தாய்மொழி இயற்கை யென்பதே இளம்பெரு வழுதிசொல் விகற்பம் என்பது விதுரன் வார்த்தை வேறுபா டென்பதே வெண்பூகன் வாய்ச்சொல் தகநம் என்பது தருமன் தாய்மொழி எரித்தல் என்பதே இளம்போதி யார்மொழி அகிலம் என்பதோ அருச்சுநன் வார்த்தை உலகம் என்பதே உறையனார் ஓசையே!