25
மயில்
மழைக்குரல் நின்குரல்; மலையே நின்மனை;
செந்தமிழ் போன்று சிறந்த பறவைநீ!
அன்றுநீ மணிமலை அருகிலே நின்று
மணித்தேர் அசைந்து வருமொலி கேட்டுக்
கழுத்தை உயர்த்தும் கலைமான் போன்றுநீ
உன்றன் கழுத்தை ஓங்கி உயர்த்தியும்
அண்ணாந்த மலையை அண்ணாந்து நோக்கியும்
இட்டசிற் றடியை எடுத்தெடுத் துன்றியும்
வண்ணத் தோகையை வட்டமாய் விரித்தே
‘ஓ’ வெனும் எழுத்தை உண்டாக்கிக் காட்டினை
கண்டேன் களித்தேன் மீண்டும் காண்கிறேன்!
நீட்டுயர் மேடையில் நாட்டிய மாடிக்
காட்டும் பறவையே! கலவை மயிலே!
தொங்கும் தோகையில் தொலைநிலை காண்கிறேன்.
வண்ணத் தோகையில் வகைநிலை காண்கிறேன்.
விரிக்கும் தோகையில் விரிநிலை காண்கிறேன்.
குறிஞ்சியே புணர்ச்சிக் குரிய திணையாம்
காதல் புரியவோ கார்காலம் சிறந்ததாம்
என்று தமிழர் இலக்கணம் வகுத்தனர்.
வகுத்த தமிழரின் வாழ்க்கை மாறினும்
மயிலேநின் வாழ்க்கை மாறவே இல்லை!