சுரதாவின் தேன்மழை 44
'வானோடு விளையாடும் நிலவே! நீரில்
வளர்கின்ற தாமரையே! கோவை நூலின்
நானூறு துறைகளைநீ அறிந்தி ருந்தும்
நதித்துறையைக் காட்டுகின்றாய்! வெள்ளிப்புள்ளி
மானோடு பார்வைப்போர் புரியும் பெண்ணே
மறந்தனையோ கட்டில்துறை காட்ட' என்றான்
தேனோடு வாய்திறந்த புதுப்பூப் போன்றாள்
செங்கதிரோ வானத்தை மறக்கும்? என்றாள்.
வரிப்புலியின் வாய்பிளந்த வீர வேந்தன்
மாலையிட்ட மங்கையிடம் பேசிக் கொண்டே
நரைத்ததுரை முட்டையிட்டுக் கொண்டி ருந்த
நதிநீரின் நீட்டத்தில் நீந்த லானான்.
திரைத்திரளால் நெடுங்கரையைக் கரைப்ப தற்குத்
திட்டமிட்ட வெள்ளத்தில், துள்ளித் துள்ளிச்
சிரித்தபடி சிலிர்த்தபடி கண்ணும் கண்ணும்
சிவந்தபடி அவளும்நீ ராட லானாள்.
தலைநிமிர்ந்த புகழ்பெற்ற சோழ நாட்டின்
தாய்ப்பாலாம் காவிரியின் ஈர நீரில்
மலருதிர்ந்து போர்வையைப்போல் மிதக்க, மேற்கு
மலைச்சாரல் சந்தனம் தக்கோலம் யாவும்
அலையுயர்ந்த வெள்ளத்தில் மிதக்க, செங்கால்
அன்னம்போல் ஒடங்கள் மிதக்க, ஒர்ப்பால்
சிலர்மிதந்து நீராட, நதியில் ஈரச்
சிலையாகிக் கொண்டிருந்தாள் ஆதி மந்தி.