பிரிட்டானியப் பயணம் 509 அவை, மழலைகள் மகிழ்ச்சியோடு நேரத்தைப் போக்கும் இடங்களாகும். பாடங்களைத் திணிக்கும் கூடங்களல்ல. பாலர் பள்ளியில் இடநெருக்கடி கிடையாது. எளிதாகக் கையாளக்கூடிய வண்ண வண்ணப் பொம்மைகள், கட்டைகள் ஆகியவை நிறைய உள்ளன. மழலையர் தம் வயதுப் பிள்ளைகளோடு சேர்ந்தோ, தனித்தோ ஆடிப்பாடி மகிழும் இடமே பாலர் பள்ளி. எண்ணும் எழுத்தும் திணிப்பது இல்லையா? இல்லை. அவற்றை விளையாட்டுப் போக்கில் இயற்கையாகவும், மெல்லவும், தேவைப்படும் அளவும் கற்றுத் தருகிறார்கள். வங்கி வழிச் சம்பளம் பள்ளிக் கட்டடக் காப்பாளர்கூட தமது ஊதியத்தைப் பணமாகக் கையில் பெறுவது இல்லை. அவருக்கும் வங்கிக் கணக்கு உண்டு. அக் கணக்கில் உரிய நாளில் வரவு வைக்கும்படி பள்ளியிலிருந்து ஆணை போகும். குறிப்பிட்ட வங்கிக் கிளை மேற்படி வரவைக் காப்பாளருக்குத் தெரிவிக்கும். அநேகமாக எல்லாப் பணியாளருக்கும் வங்கி வழியாக ஊதியம் வழங்குவது வாடிக்கை. வங்கியில் இருந்து வாங்கும்போது யோசித்து அளவாக வாங்குவதுதான் மக்கள் இயல்பு. எனவே, எல்லோரும் அந்தந்தத் திங்களில் ஊதியம் முழுவதையும் செலவிட்டு விடுவதில்லை. திங்கள் தோறும் சிறு தொகை மிச்சமாகும். தமிழகத்தில் வெள்ளோட்டம் இந்த முறையைத் தமிழகத்தில் வெள்ளோட்டம் பார்த்தேன். 1968இல் மதுரை டி. வி. எஸ் நகரில் நடந்து வரும் டி. வி. எஸ். உயர்நிலைப் பள்ளியில் இம் முறையை நடத்தச் சொன்னேன். ஆசிரியர்கள் அத்தனை பேரும் வங்கி வழியாகச் சம்பளம் பெற ஒப்புக் கொண்டனர். நிர்வாகம் அப்படியே கொடுத்தது. ஆண்டின் இறுதியில் ஒவ்வொருவர் கணக்கிலும் பணம் மிச்சமாக இருந்தது.