பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


ஒருவர் அதிகமாக சாப்பிடுவதால் அல்லது அதிகமாகப் புகைப்பதால் குடிப்பதால் அல்லது அதிகமாகக் கவலைப்படுவதால் அல்லது உடற்பயிற்சியே இல்லாமல் இருப்பதால் போன்ற ஏதாவது ஒன்று இதயத்தின் இனிய வேலையை எதிர்பார்ப்பதற்கு மேலாகவே பாழடித்து, வீழ்த்தி விடுகிறது.

சுவாசமும் இரத்த ஓட்டமும் தான் உடலை உயிராகக் காக்கின்றன என்பதை நாம் அறிந்து கொண்டோம்.

பழக்கங்கள் பாதிக்கும்

பழக்கங்கள் எல்லாம் சுவாசத்தை மிகுதிப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை விரைவு படுத்தவும் கூடிய வகையில் அமைவது தான் சிறந்த வாழ்க்கையைக் குறிப்பதாகும்.

ஒவ்வொரு மனிதரும் இளமையாகவும் இனிமையாக வாழ வேண்டும் என்றால், தடையிலா இரத்த ஓட்டத்தை மிகுதிப்படுத்திக் கொள்ளவே முயல வேண்டும்.

இரத்தக் குழாய்கள் தடித்துப்போகவும், குழாய்களுக்குள் கொழுப்புச் சத்து ஏறிக் குறுக்கிட்டு தடுக்கவும் செய்கின்ற காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு, இதயம் சுமையேறி, வேதனைக்கு ஆளாவதுதான் முடிவானதாகி விடுகிறது. பிறகு, அவர்களுக்கு நிம்மதிதான் எது?

ஆகவே, சுவாசத்தின் அளவைக் குறைப்பதும், இரத்த ஓட்டத்தின் விரைவைத்தடுப்பதும், இதயத்திற்கு வலிமையை அளிக்காமல் நலிவினைக் கொடுப்பதும், இளமையை இழக்கச் செய்யும் காரியங்களாகும் என்பதை நாம் அறிந்து கொண்டோமானால், அவற்றிற்கு ஒரே பரிகாரம், இளமையை மீட்கும் மேலான வழி உடற்பயிற்சியே என்பதையும் நாம் உணர்ந்து கொள்வதுடன், ஒத்துக் கொண்டும் செயல்பட வேண்டும்.