பக்கம்:பாற்கடல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

லா. ச. ராமாமிருதம்


எந்தக் கலைக்கும் கச்சா சரக்கு, வாழ்க்கையும் மக்களுந்தான் - காசுக்குத் தலையும் பூவும் போல, எழுத்தின் (கதை, கட்டுரை, வரலாறு, கவிதை, கடிதம், வெள்ளைக் காகிதத்தைக் கறுப்புக் காகிதமாக்கும் இத்யாதிகள் அனைத்தையும் அணைத்ததைத்தான் எழுத்து எனக் குறிப்பிடுகிறேன். நான் பயிலும் கலை சம்பந்தமாக, இந்த விளக்கம் இனிமேலும் பொருந்தும் என வேண்டிக்கொள்கிறேன். எழுத்தின் இன்றியமையாத, இரு பக்கங்கள் எழுத்தாளனும், வாசகனும்.

"நீ இல்லாமல் நானில்லை.
நானில்லாமல் நீயில்லை.
டடடா டடடா
டட்டா டட்டா—

கூடத்தில் திடீரென ரேடியோவின் ஒலி பயங்கரத்துக்குப் பெருகுகிறது.

“எனக்காகவே எழுதிக்கொள்கிறேன்!" வாஸ்தவம், எழுதுகிறவரை இது சரி எழுதியதைப் பிறருக்குக் காட்டாமல், நானே படித்துக் கொண்டாலும், அந்த சமயத்துக்கு நான் வாசகன்தானே! இந்தத் தர்க்க நுணுக்கங்கள் எதற்கு? வாசகன் என்கையில், படிப்பவன் - படிக்கத் தெரிந்தவன் மட்டும் குறிப்பாக இல்லை. படிக்கக் கேட்டுத் தெரிந்து கொண்டாலும் யாரோ எழுதியதை, யாரோ படித்து, அதை அவரிடமிருந்து, யாரோ சொல்லிக் கேட்டுத் தெரிந்துகொண்டாலும் நேரும் பலன்கள் வேறுபடினும் எழுத்தின்மூலம் பரவிய விஷயஞானம் கொள்கையில் ஒன்றுதான். வெளிப்படுத்துவோனிடமிருந்து வாங்கிக் கொள்பவன் எனும் இந்த உடந்தை நிலை மாறவே முடியாது. சமைப்பது, சாப்பிடுவதற்குத்தான். எழுத்தும் முக்கியமான ஊட்ட வகைகளைச் சேர்ந்ததுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/118&oldid=1533970" இலிருந்து மீள்விக்கப்பட்டது