பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

புதியதோர் உலகு செய்வோம்

அவள் சேலை உரியப் பெற்றபோது, ஐந்து நாயகர்களும் கைவிட்ட நிலையில், கண்ணன் உற்ற தோழனாக வந்து உதவினான். பொருள் சார்ந்த பேராசைகளில் ஒருவரை மற்றவர் தாக்க, போர் அல்லது சாதி-மத சமூகக் கலவரங்கள் நிகழும்போது, அப்பாவிகளான பெண்களுக்கு குரூரங்கள் இழைக்கப்படுகின்றன. அதுவும், காக்கிச் சட்டையணிந்து காவலராகக் காக்க வேண்டிய கடமையில் இருப்பவரே கயவர்களாகி, குற்றங்களுக்குச் சம்பந்தமே இல்லாத பெண்களை வன்முறைகளுக்கு உட்படுத்துகின்றனர்.

நாடு துண்டாடப்பட்டபோது, மதத்தின் பெயரால் இந்தியத் திருநாட்டில் பெண்களுக்கிழைக்கப்பட்ட குரூரங்கள், வன்முறைகள், நினைக்கவே இரத்தம் சுண்ட வைப்பனவாக இருந்தன. காந்தியடிகள் மனம்நொந்து, அந்த இடங்களில் எல்லாம் தம் மலர்ப்பாதம் பதிய நடந்தார். அவருடைய உள்மனதில் பதிந்த அந்த இரணங்கள் இறுதிவரை ஆறவேயில்லை. “பெண்ணே உன் மானத்துக்கு ஊறு வரும்போது, நீ இம்சைச் செயலில் ஈடுபட்டு உன்னைத் தற்காத்துக் கொள்ளலாம்” என்று உரைத்தார்.

நேருக்கு நேர் திறமையால் மேநிலை எய்திய பெண்களுடன் வாதுகள் செய்யலாம்; வாளேந்திப்போரும் புரியலாம். ஆனால் இந்நாள் அவளுடைய மேம்பாட்டையும் மேநிலையையும் ஒப்புக் கொள்ளாத ஆதிக்கங்கள், குன்றேறி நிற்கும் கருவங்கள், மூர்க்கத்தனமான செயல்களில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

உலகெங்கும் இந்தப் பாதகங்கள் நடைபெறுகின்றன. வளமையும் செல்வமும் மிகுந்த நாடுகளானாலும், போர்வெறி மூண்டுவிட்டால் அங்கே பலியாக்கப்படுபவர் குற்றமற்ற பெண்களும் குழந்தைகளும்தாம்.