பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. பெண்களும் குழந்தைகளும்

(நுகர்வுக் கலாச்சாரத்துக்கு தீனி போடும் இலக்குடன் இன்றைய பெண்கள் தங்கள் மகத்தான இல்லப் பங்களிப்பை அலட்சியமாகக் கருதுவது சரிதானா என்ற ஒரு மறுபரிசீலனை மேற்கொள்வது எனக்கு இச்சமயம் அவசியமாகப்படுகிறது. இந்த நோக்கில் காந்தியடிகளின் கருத்தும் அறிவுரையும் தீர்க்கதரிசனங்கள். இதைக் கருத்தில் கொண்டு இதை எழுதுகிறேன்)

காலை ஏழு மணி, இளங்குழந்தைகள் இருக்கும் குடும்பங்களுக்கு நெருக்கடி நேரம் கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனித்தனியாக அடுக்குமாடிப் பொந்துகளிலும், கூடம், தாழ்வரை ஒன்றாங்கட்டு, இரண்டாங்கட்டு என்று இன்னமும் புறநகர்ப்பகுதிகளிலும் எஞ்சியிருக்கும் புராதன வீடுகளிலும் சிதறிப் போன பிறகு, நெருக்கடிகளுக்கும் இரைச்சல்களுக்கும் மோதல்களுக்கும் எல்லோரும் பழகிப் போயிருக்கிறார்கள். ஒற்றைக் குடும்பங்களில், தந்தையும் தாயும் பொருள் தேடப் போகிறார்கள். இருவரும் இல்லம் விடுவதானால், கைக்குழந்தையில் இருந்து, மழலைப் பள்ளிக்குப் போகும் பிஞ்சுகளையும் தயார் செய்தாக வேண்டும். தண்ணீர் பிரச்னை, குளியலறை பிரச்னை, உணவு தயாரிக்கும் சங்கடங்கள் எல்லாவற்றுக்கும் மேல், மழலைப் பள்ளிகளுக்குச் செல்லும் இரண்டுங் கெட்டான்களுடன் போராடும் குரல்கள் அக்கம் பக்கங்களில் வந்து மோதும்.

‘சனியனே? பாலைக் குடி! மணி எட்டுடா? வேன் வந்துட்டுப் போயிடும். அன்னாடம், ஆட்டோவுக்கு அழ முடியாது...!’