உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

91

அழும்பு, அடம்!...

‘டேய், குடிடா, நேரமாயிடுச்சில்ல...?’

சாமதான பேதங்களுக்கு மசியாத பிஞ்சின் முதுகில் அடிவிழும். வலுக்கட்டாயமாகப் பாலைக் கொடுக்க, துப்பியோ வாந்தி எடுத்தோ ரகளை கிளம்பும். மேலும் அடிகளுடன் சொற்களையும் கடித்துத் துப்பிக் காயப்படுத்துவார் அன்னை ஒருவழியாகப் புத்தகமூட்டை, பகலுணவுக்கான டப்பி, தண்ணீர்க் குப்பி இவற்றுடன் தரதரவென்று சாலையில் வந்து நிற்கும் வண்டிக்குள் திணிக்க இழுத்துச் செல்வார்கள். இடையில் சனி-ஞாயிறு விடுப்புகள் வந்துவிட்டால், குழந்தை அந்த சுகத்தை அநுபவித்துவிடும். திங்கட்கிழமை மனசிக்கலில், பிரளயமே வெடிக்கும்.

குழந்தையின் வளர்ச்சி, இயல்புக்கேற்ற ஆரோக்கியத்துடன் நிகழ இன்றைய சூழல் அநுமதிப்பதில்லை. தாய்ப்பால், தாய்மடி, தாய்மொழி இவை பல குழந்தைகளுக்கும் வலுகட்டாயமாக அந்நியமாக்கப்படுகின்றன. தன் பணிச் சுமையிலிருந்து விடுபட இயலாத பெரும்பாலான தாய்மார், உள்ளே குற்ற உணர்வுகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். காலையில் இருந்து இரவு பத்து பத்தரை மணி வரையிலும் இல்லம்விட்டு வெளியே தொழில் செய்யும் ஒரு மருத்துவர் தம்பதியின் குழந்தைகள், ஆயா, சமையற்காரி போன்ற ஊதியத்துக்குப் பொறுப்பேற்கும் பெண்களிடமே வளருகின்றன. இந்தக் குற்ற உணர்வை மாற்றிக் கொள்ள அன்றாடம் இரவு வீடு திரும்புகையில் குழந்தையின் உடல்நலத்துக்குத் தீமை பயக்கும் என்று உணர்ந்தும், அவன் விரும்பி உண்ணும் ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற பண்டங்களை வாங்கி வந்து, உறங்கினாலும் எழுப்பிக் கொடுத்து, முத்தமிட்டு ஆறுதல் பெறுகிறாள் தாய்.