பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 / புத்தரின் வரலாறு

புத்த நிலையை யடைகிற பிறப்பிலே பிறரை வணங்குவது மரபன்று. இதனை ஞானக் கண்ணினால் அறிந்த அசித முனிவர், உடனே ஆசனத்தைவிட்டு எழுந்து நின்று குழந்தையைக் கைகூப்பி வணங்கினார். முனிவர் குழந்தையை வணங்குவதைக் கண்ட அரசன் பெரிதும் வியப்படைந்து தாங்க முடியாத அன்போடு குழந்தையின் கால்களில் தானும் தன் தலையை வைத்து வணங்கினார்.

அசித முனிவர், குழந்தையின் திருமேனியில் காணப்பட்ட எண்பது விதமான மகா புருஷ லக்ஷணங்களைக் கண்டு, தமது ஞானக் கண்ணினால் சிந்தித்துப் பார்த்து இந்தக் குழந்தை புத்தர் ஆகப்போவதை அறிந்து ஆனந்தங்கொண்டு மகிழ்ந்தார். பிறகு, இக்குழந்தை புத்த பதவியடையும்போது தாம் உயிர் வாழ்ந்திருந்து பார்க்க முடியாது என்பதையும் உணர்ந்து வருத்தத்தோடு அழுதார். முனிவர் முதலில் மகிழ்ந்ததையும் பின்னர் அழுததையுங் கண்ட அமைச்சர்கள் அதற்குக் காரணங் கேட்டார்கள். முனிவர் இவ்வாறு விளக்கங் கூறினார்: "போதிசத்துவராகிய இந்தக் குழந்தைக்கு யாதொரு தீங்கும் வராது.இவர் புத்த பதவியை யடையப்போகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் இவர் புத்தராவதற்கு முன்பே நான் இறந்துவிடுவேன். ஆகையினால் அப்போது இவரைக் காண முடியாதே என்பதற்காக வருத்தம் அடைந்தேன்" என்று கூறினார்.

பின்னர் அசித முனிவர் அரண்மனையை விட்டுப் புறப்பட்டுச் சென்று தன் தங்கையின் வீட்டுக்குப்போய், தங்கையின் மகனான நாலக குமாரனை அழைத்து, சுத்தோதன அரசருடைய குழந்தை தனது முப்பத்தைந்தாவது வயதில் புத்த பதவியடையப் போகிறதென்பதையும் அச்சமயத்தில் தாம் உயிருடன் வாழ்ந்திருக்க முடியாது என்பதையும் கூறி, "குழந்தாய்! நீ இப்போதே இல்லறத்தைவிட்டு துறவு பூண்டிருப்பாயாக. அவர் புத்த ஞானம் பெற்ற பிறகு அவரிடம் சென்று உபதேசம் பெற்று அதன்படி ஒழுகுவாயாக." என்று மொழிந்தார்.

அம்மானாகிய அசித முனிவர் கூறியதைக்கேட்ட நாலக குமரன், அவர் கூறியதை ஏற்றுக்கொண்டு அப்போதே துறவு கொண்டார். தலைமுடியையும் தாடியையும் மழித்துப்போட்டு போதிசத்துவர்[1]


  1. போதிசத்துவர் புத்தரான பிறகு நாவக முனிவர் இமயமலையிலிருந்து வந்து அவரிடம் ஞாளோபதேசம் பெற்று மீண்டும் இமயலைக்குச் சென்றார். நாலக முனிவருக்குப் புத்தர் அருளிய உபதேசங்களைச் சூத்திர நிபாதத்தின் நாலக சூத்திரங்களில் காணலாம்.