பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 11

இருந்த திசை நோக்கி வணங்கி "உலகத்திலே யார் மேலான உத்தமராக இருக்கிறாரோ அவருக்காக நான் காவியாடை தரிக்கிறேன்" என்று கூறி காவி உடை அணிந்துகொண்டார். பிறகு நாலகர் இமயமலைச் சாரலில் சென்று தவம் செய்துகொண்டிருந்தார்.

குழந்தைப் பருவம்

போதிசத்துவர் பிறந்த ஐந்தாம் நாள் அவருக்குப் பெயர் சூட்டு விழா நடந்தது. கல்வியில் தேர்ந்த நூற்றெட்டு நிமித்திகர்களை அரசர் அழைத்து, அவர்களுக்கு அறுசுவை உணவுகளை விருந்தளித்தார். பிறகு, "என் மகனுடைய இலக்ஷணங்களை அறிந்து அவனுக்கு ஏற்ற பெயரைச் சூட்டுங்கள். அன்றியும், அவன் வாழ்க்கையில் நடைபெறப் போகிறவைகளையும் பிழையில்லாமல் கணித்துக் கூறுங்கள்" என்று கேட்டார். இந்த நூற்றெட்டு நிமித்தகர்களில் இராமர், தஜர், இலக்குமணர், மந்த்ரி, கொண்டஞ்ஞர், போஜர், சுயாமர், சுதத்தர் என்னும் எண்மரும் மிகத் தேர்ந்த நிமித்திகர்கள். இவர்களுள்ளும் கொண்டஞ்ஞர். வயதில் இளையவராக இருந்தாலும் கணித நூலிலே மற்றவரைவிட மிகத் தேர்ந்தவர்.

அரசர் கேட்டுக்கொண்டபடியே பேர் போன இந்த எட்டு நிமித்தர்களும் போதிசத்துவ குமாரனுடைய திருமேனியிலே காணப்பட்ட அங்க அடையாளங்களைக் கூர்ந்து நோக்கினார்கள். இவர்களில் ஏழு பேர் தமது இரண்டு கைவிரல்களை காட்டி இந்தக் குமாரன் இல்லறத்தில் இருந்தால் சக்கரவர்த்தி ஆவார்; துறவு பூண்டால் புத்தர் ஆவார் என்று இரண்டுவிதக் கருத்தைக் கூறினார்கள்.

ஆனால், ஆண்டின் இளையவராகிய கொண்டஞ்ஞர், குழந்தையின் நெற்றியின் நடுவிலே வலமாகச் சுருண்டு வளர்ந்திருந்த ஊர்ஷ்ணஉரோமத்தைக் கண்டு, ஒருவிரலை மட்டும் காட்டி, "இந்தக் குழந்தை கட்டாயம் இல்லறத்தை விட்டுத் துறவறம் பூண்டு புத்தர் ஆவார்" என்று அறுதி இட்டுக் கூறினார். மேலும், "இவர் உலகத்திற்கு அர்த்தசித்தி[1] செய்யப்போகிறவர். ஆகையினாலே இவருக்குச் சித்தார்த்தர் என்று பெயர் சூட்டுவது தகுதியாகும்" என்றும் கூறினார்.

கொண்டஞ்ஞ முனிவர் கூறியதைக் கேட்ட சுத்தோதன அரசர் இவ்வாறு கூறினார்: "வாழ்க்கையிலே வெறுப்பை உண்டாக்கும் காரணங்களைக் கண்ட மக்கள் துறவு கொள்வது வழக்கம். வாழக்கையில் வெறுப்பு கொண்டு துறவு பூண்டவர் வீடு


  1. அர்த்தசித்தி - உலகத்திற்கு உயர்ந்த மேன்மையைக் கொடுப்பது