பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 / புத்தரின் வரலாறு

இவ்வாறு தேவர்களுடைய ஐயத்தை நீக்கிய பின்னர், பகவன் புத்தர் தரையில் இறங்கி, புத்த ஆசனத்தைக் கண் இமைக்காமல் பார்த்தார். "இந்த ஆசனத்தில் இருந்தபோது எனக்குப் புத்த பதவி கிடைத்தது. நான்கு அசங்கிய கல்பலக்ஷகாலம் வரையில் நான் நிறைவேற்றிய பாரமிதைகளின் பலனாக இந்தப் புத்த பதலி இந்த ஆசனத்தில் இருக்கும்போது எனக்குக் கிடைத்தது" என்று நினைத்து நன்றியறியும் உள்ளத்துடன் அந்தப் போதியாசனத்தைக் கண்களினாலே பார்த்துக்கொண்டே இருந்தார். இவ்வாறு இரண்டாவது வாரம் கழிந்தது. இவ்வாறு இமை கொட்டாமல் பார்த்திருந்த இடத்திற்கு அறிம சலோசன சைத்தியம் என்பது பெயராகும்.

மூன்றாம் வாரம்

பின்னர், மூன்றாவது வாரம் முழுவதும், போதியா சனத்தின் அருகிலேயே ததாகதர் கிழக்கு மேற்காக உலாவிக்கொண்டிருந்தார். இந்த இடத்திற்கு இரத்தின சங்கரமன சைத்தியம் என்பது பெயராகும்.

நான்காவது வாரம்

நான்காவது வாரத்தில், போதி மரத்திற்கு வடமேற்கில் சென்று இரத்தின கிரஹத்தில் அமர்ந்து தாம் கண்ட போதி தர்மத்தை மனத்திலே நினைத்து ஆராய்ந்தார். இந்தத் தர்மத்தைக் கேட்டு இதன்படி ஒழுகுகிறவர்கள், சீலத்தில் மனத்தை நாட்டிச் சமாதியை தியானித்துப் பிரஞ்ஞா (அறிவினால்) மூலமாகத் தத்துவத்தை நன்கறிந்து உயர்ந்த நெறியில் ஒழுகுவார்கள் என்று கருதினார். சீலத்தைப் பற்றி வினயபிடகம், சமாதியைப் பற்றி சூத்திராந்த பிடகம், பிரஜ்ஞாவைப் பற்றி அபிதர்மபிடகம் என்னும் மூன்றையும் சிந்தித்தார். இவை எல்லாத் தர்மங்களைவிட மேலானதாகவும் ஆழமானதாகவும் இருப்பதை அறிந்து உவகை கொண்டார்.

அப்போது அவருடைய இருதயத்தில் உதிரம் மிகவும் தூய்மையாயிருந்தது. தேகத்தில் ஒளி வீசிற்று. அவருடைய திருமேனியிலிருந்து எண்பது முழம் வட்டத்தில் ஒளிக் கிரணங்கள் வீசின. அப்போது அந்த இடத்திலே ஆயிரம் சூரிய சந்திரர்கள் இருந்து ஒளி வீசுவதுபோலத்தோன்றியது.

பகவன் புத்தர் போதி ஞானம் அடைந்து நான்கு வாரம் வரையில் போதி மரத்தின் அருகிலேயே இருந்தார். ஐந்தாவது வாரம்