பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 / புத்தரின் வரலாறு

தாங்கிக்கொண்டான். ஏழு நாட்களுக்குப்பிறகு மழை நின்று வானம் வெளுத்தது. அப்போது நாகராசன், பகவன் புத்தரை விட்டு வெளிவந்து இளமைப்பருவமுள்ள மனித உருவத்துடன் தோன்றிக் கை கூப்பித் தலைவணங்கி நின்றான். அப்போது பகவன் புத்தர் அவனுக்கு இவ்வாறு திருவாய் மலர்ந்தருளினார்.

"உண்மையைக் கண்டு அதனை உணர்ந்து மகிழ்ச்சியோடிருக்கிறவரின் ஏகாந்தம் இன்பமானது. அழுக்காறு இல்லாமல் எல்லா உயிர்களிடத்திலும் அன்புள்ளவராய்த் தன்னடக்கத்தோடு இருப்பவர் மகிழ்ச்சியுள்ளவராவர். நான் என்கிற ஆணவத்தை விட்டவர் இன்பம் அடைகிறார். ஆசையை நீக்கியவர் இன்பம் உள்ளவர் ஆவர்" இவ்வுபதேசத்தை கேட்ட நாகராசன் மனமகிழ்ந்து வணங்கிச் சென்றான்.

பகவ்ன் புத்தர் ஆறாவது வாரத்திற்குப் பிறகு முசலிந்த மரத்தை விட்டு அகன்று இராஜாயதன மரத்தண்டை சென்றார். சென்று அம்மரத்தின்கீழ் யோகத்தில் அமர்ந்து ஏழு நாட்கள் இருந்தார். ஏழாவது நாளின் இறுதியில் பகவன் புத்தர் தியானத்திலிருந்து விழித்தார். ஏழுவாரம் வரையில் அவர் உணவு கொள்ளவில்லை. போதிஞானத்தைச் சிந்திப்பதிலேயும் தியானத்திலும் அவர் நாட்களைக் கழித்தார்.

சாவக நோன்பிகள்

தியானத்திலிருந்து விழித்தபோது சக்கன் (தேவேந்திரன்) அவரிடம் வந்து பல்தேய்க்க பல் குச்சியையும் முகம் கழுவ நிரையும் கடுக்காய் மருந்தையும் கொடுத்துவிட்டுப் போனார். பகவன்புத்தர் பல்தேய்த்து முகம் கழுவி இராஜாயதன மரத்தின் அடியில் அமர்ந்தார்.

அப்போது உத்கல (ஒரிஸா) பிரதேசத்திலிருந்து ஒரு வாணிகச்சாத்து அவ்வழியே போய்க்கொண்டிருந்தது. ஐந்நூறு வண்டிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும் இந்தச் சாத்தின் தலைவர்களாக தபஸ்ஸன், பல்லிகன் என்னும் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இந்த வாணிகச் சாத்து செல்லும் வழி கெட்டியான தரையாக இருந்தும் வண்டிச் சக்கரங்கள் நகராமல்நின்றன. எருதுகள் வண்டிகளை இழுக்க முடியாமல் இடர்ப்பட்டன. இதைக் கண்ட வணிகர் வியப்படைந்து என்ன காரணம் என்றறியாமல் தவித்தனர். அப்போது ஒருவன்மேல் தெய்வம் ஏறி, பகவன் புத்தர் இராஜாயதன மரத்தின் அடியில் இருப்பதைக் கூறி அவருக்கு உணவு தானம் செய்யும்படி கூறிற்று.