பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 73

தெய்வ வாக்கைக் கேட்ட வணிகத் தலைவர் இருவரும் தேனையும் மாவையும் எடுத்துக்கொண்டு பகவன் புத்தர் எழுந்தருளியிருந்த இடத்திற்கு வந்தார்கள். வந்துஅவரை வணங்கி அவருக்கு உணவு கொடுத்தார்கள். அப்போது பகவரிடம் பாத்திரம் ஒன்றும் இல்லை. இவர்கள் கொடுக்கும் உணவை எதில் பெற்றுக்கொள்வது? என்று சிந்தித்தார். அப்போது அவருடைய சிந்தனையை அறிந்த சதுர்மகாதேவர்கள் நால்வரும் வந்து நான்கு அவருக்கு அளித்தார்கள். அப்பாத்திரங்களைப் பெற்றுக் கொண்ட பகவர், அவைகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்தார். உடனே அப்பாத்திரங்கள் ஒரே பாத்திரமாயின. அப்பாத்திரத்திலே வணிகச் சகோதரர் அளித்த உணவை ஏற்றுக்கொண்டார்.

உணவை உட்கொண்ட பிறகு பகவர், அவர்களுக்கு அறநெறியை உபதேசம் செய்தார். அறநெறியைக் கேட்ட வணிகர் மனமகிழ்ச்சியடைந்து பகவரை வணங்கி, "பகவரே! நாங்கள் தங்களிடத்திலும் தங்கள் தர்மனிடத்திலும் அடைக்கலம் அடைகிறோம். எங்களைச் சீடராக ஏற்றுக்கொண்டருள வேண்டும்" என்று வேண்டினார்கள். பிறகு தாங்கள் வணங்குவதற்காக ஏதேனும் பொருளைத் தரும்படி கேட்டார்கள். பகவர் தமது தலையிலிருந்து எட்டுப்பிடி சிகையைப் பிய்த்துக்கொடுத்தார். அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு போய் பொற்கிண்ணத்தில் வைத்துத் தாம்பிறந்த தேசத்திலேயுள்ள அசிதஞ்சன நகரத்தில் ஒரு சேதியம் கட்டி அதில் வைத்து வணங்கி வந்தார்கள்.

தபஸ்ஸன், பல்லிகன் என்னும் இவர்கள்தாம் முதன் முதலாக பகவன் புத்தரிடத்தில் இரண்டு சரணங்களை மட்டும் கூறிச் சீடரானார்கள்.

எட்டாவது வாரம்

பிறகு பகவர் இராஜாயதன மரத்தைவிட்டுப் புறப்பட்டு மறுபடியும் அஜபால ஆலமரத்துக்குச் சென்றார். சென்று அவ்விடம் தங்கி தாம் கண்ட போதிதர்மத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது தாம் கண்ட போதி தர்மத்தை உலகத்தவருக்குப் போதிக்காமல் வாளாஇருப்பது நலம் என்று அவருக்கு எண்ணம் தோன்றியது. பகவர் எண்ணிய இந்த எண்ணத்தைச் சகம்பதி பிரமன் அறிந்தார். "ஐயோ! உலகம் அழிந்துவிடும். புனிதரான சம்புத்தராகிய ததாகதர், தாம் கண்ட அறநெறியை உலகத்திற்குக் கூறாமல் போனால், உலகம் அழிந்துவிடும்” என்று சகம்பதி பிரமன் எண்ணினார்.