பக்கம்:மயில்விழி மான்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடகக்காரி

97

முன் புறத்திலிருந்துதான், ஆயிரம் பேரிடிகள் சேர்ந்தாற்போல் நீடித்து இடித்தது போன்ற சத்தம். நூறு எம்ட்டன் குண்டுகள் ஒருமிக்க வெடித்தது போன்ற சத்தம். என் காதின் நரம்புகள் தெறித்து அறுபட்டுவிட்டதாகத் தோன்றியது. என் மண்டையே ஆயிரம் சுக்கலாகிவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. அந்த வெடிச் சத்தத்தின் அதிர்ச்சியினால் நமச்சிவாயத்தின் கழுத்திலிருந்து என் கைகள் வெளிவந்தன. இரண்டு பேரும் தூர தூரப் போய் விழுந்தோம். ஒரு நிமிஷ மூளைக் குழப்பத்துக்குப் பிறகு நேர்ந்தது என்ன என்பது என் அறிவுக்குப் புலனாகிவிட்டது. அந்த வீட்டின் முன் அறை மட்டும் என் சிநேகிதர் ஒருவர் வசத்தில் இருந்தது. அவர் பலசரக்கு வியாபாரி. தீபாவளி சமயத்தில் அவர் பட்டாசுக்கட்டுக் கடையும் நடத்துவார். பெரிய பெரிய கள்ளிப் பெட்டிகளில் வரும் பட்டாஸ் கட்டுகள், மத்தாப்புப் பெட்டிகளை அந்த அறையில் போட்டுப் பூட்டி வைத்திருப்பார். கொஞ்சங் கொஞ்சமாகத் தேவைப்படும்போது சில்லறை விற்பனைக் கடைக்கு எடுத்துப் போவார்.

அந்த அறைக்குள் எப்படியோ நெருப்புப் பொறி பறந்து விழுந்து, பட்டாசுப் பெட்டிகளில் தீப்பிடித்து விட்டது என்பதை அறிந்து கொண்டேன்.

மறுநிமிஷம் வீடு ஒரே புகை மயமாகி விட்டது. முன் அறையின் கூரை தீப்பற்றி எரிவதையும் கண்டேன். வீட்டைப்பற்றி நான் அப்போது கவலைப் படவில்லை. வெடி விபத்தினால் விளையக்-

99—7