இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குவட்டாவில் கூட்டக்கொலை
எந்த நிமிஷத்திலும்—சாதல்
ஏற்படக் காரணங்கள்
ஐந்து லக்ஷம் உளவாம்—இதில்
ஐயமுற வேண்டாம்.
இந்த உலகத்திலே—“நீ
இருத்தல்” என்பதெலாம்
வந்த விபத்துனையே—கொஞ்சம்
மறந்த காரணத்தால்!
வானமும் மண்ணகமும்—உண்டு;
மத்தியில் நீ யிருந்தாய்.
வானிடைக் கோடிவகை—“நிலை
மாற்றம்” நிகழ்வதுண்டாம்.
ஆனஇம் மண்ணகத்தே—பதி
னாயிரம் உற்பாதம்!
பானை வெடிக்கையிலே—அதிற்
பருக்கை தப்புவதோ!
நாளைய காலையிலே— இந்த
ஞாலம் உடைவதெனில்,
வேளை அறிந்ததனை—நீ
விலக்கல் சாத்தியமோ?
ஆளழிக்கும் விபத்தோ—முன்
னறிக்கை செய்வதில்லை.
தூளிபடும் புவிதான்—இயற்கை
சுண்டுவிரல் அசைத்தால்!
12