132
மேனகா
அவர் அடுத்த வண்டியில் அவசியம் வருவார். நான் இந்தப் பெண்ணின் மாமியார்; அவசரமாக ஆபரேஷன் ஆகவேண்டு மானால், நான் பத்திரம் எழுதிக்கொடுக்கிறேன், தயவு செய்து வேலையை நடத்துங்கள்” என்று நயந்து கூறி வேண்டிக் கொண்டாள். துரைக்குப் பொறுக்கக்கூடாத ஆத்திரம் உண்டாயிற்று. “Damn nonsense, you talk bloody rot. இதென்ன புத்தியில்லாத பேச்சு நீ பத்திரம் எழுதிக்கொடுத்தால், அது குப்பையில் போடத்தான் உபயோகப்படும்; அவர் எழுதிக் கொடுக்காவிட்டால் நான் ஆபரேஷன் செய்யத் தயாராக இல்லை. சாயுங்காலத்துக்குள் அவரையும் அழைத்துக்கொண்டு வந்து சேருங்கள். நான் அவசரமாக வெளியில் போக வேண்டும்” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டு, ஏதோ ஒருவகையான மருந்தைத் தயாரித்து, அதைத் தங்கம்மாளது மூக்கின் வழியாக உட்புறம் செலுத்தி விட்டு, “சரி; எடுத்துக்கொண்டு போங்கள்” என்று மூர்க்கமாகப் பேசிவிட்டு வெளியில் நடந்தார்; அவரிடம் இனி நயப்பதில் பயனுண்டாகா தென்பது நன்றாக விளங்கியது. தொட்டில் உடனே வண்டிக்குப் போய்ச் சேர்ந்தது; அதே காலத்தில் தமது வண்டியில் ஏறிக்கொண்ட துரை கிட்டனைப் பார்த்து, “ஏன் ஐயா! நீங்கள் எந்த இடத்தில் இறங்கி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். கிட்டன், “சர். சவலை இராமசாமி முதலியார் சத்திரத்தில் இறங்கப்போகிறோம்” என்றான். அதைக் கேட்டுக்கொண்ட துரை அலட்சியமாகப் போய்விட்டார்; மோட்டார் வண்டி, சர். சவலை இராமசாமி முதலியார் சத்திரத்திற்குச் சென்றது. அதில் வசதியான இரண்டு அறைகள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த ஜாகையில் தொட்டில் வைக்கப்பட்டது. கனகம்மாள், கிட்டன், ரெங்கராஜூ ஆகிய மூவரும் என்ன செய்வது என்பதை அறியமாட்டாமல் ஏங்கி பெருங் கவலையால் பீடிக்கப்பட்டு மூலைக்கொருவராக உட்கார்ந்து விட்டனர். எவருக்கும்