உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காரியவாதி

197



"அம்மா! எத்தனை கஷ்டங்கள் எனக்கு இருந்தாலும் இனிமே உன்னுடைய கஷ்டத்தைப் பார்த்துக்கிட்டு என்னாலே ஒரு நிமிசம்கூடச் சும்மா இருக்க முடியாது. ‘நாலு பேரு' சொல்றது என் காதிலே நாராசமா விழறது...!”

“ஐயோ! அப்படி என்ன அபாண்டம் சொன்னாங்க, அண்ணாச்சி "

“வேறே என்ன சொல்லுவாங்க, தங்கச்சி என்ன இருந்தாலும் ஒரு அறியாத பொண்ணு; சின்னஞ் சிறிசு; அறுத்துப் போட்டவ; ஊரிலே இருக்கிற தடியன்களுக்கு மத்தியிலே ஒண்டியாயிருக்கலாமா?"ன்னு அவங்க கேட்கிறாங்க. அதை என்னாலே காது கொடுத்துக் கேட்க முடியலே. 'அறுத்தவ ஆத்தா வீட்டிலே’ என்று பெரிய வங்க சொல்லுவாங்க; அதன்படி நீ என் வீட்டிலே வந்து இருக்கிறதுதான் நல்லது. என்ன, நான் சொல்றது?”

அன்று கடவுள் கொடுத்த கையையும் காலையும் நம்பி வாழச் சொன்ன அண்ணன், இன்று ஏன் இப்படிச் சொல்கிறான்? பொன்னிக்கு விஷயம் புரியாமல் போகவில்லை. அவள்'களுக்' கென்று சிரித்து விட்டாள்.

‘அண்ணாச்சி'யின் முகம் சுண்டி விட்டது. "ஏனம்மா, சிரிக்கிறே?” என்று கேட்டான், எதையோ பறிகொடுத்தவன் போல.

"ஒண்ணுமில்லை, அண்ணாச்சி என்ன இருந்தாலும் கடவுள் கொடுத்த கையையும் காலையும் வச்சிக்கிட்டு, நான் பாட்டுக்கு இருக்கிறதுதான் நல்லது. அண்ணாச்சி இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ தொல்லை, தொந்தரவு இல்லாமல் இருக்க வேணாமா?" என்றாள் பொன்னி.

அவள் அவ்வாறு சொல்லி வாய்மூடியதுதான் தாமதம், அவன் தன்னுடைய 'வேஷத்தைக் கலைத்தான். "ஓஹோ அம்மட்டுத் தூரத்துக்கு வந்துட்டியா?-இனிமே உன் வீட்டு வாசல்லே காலை வச்சா ஜோட்டை எடுத்துக்கோ!" என்று வீராப்புடன் சொல்லிக் கொண்டே, துண்டை உதறித் தோளின் மேல் போட்டுக் கொண்டு எழுந்தான்.

அந்தக் காரியவாதி எதிர்பார்த்தபடி, பொன்னி அவனுடைய காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்ளவில்லை!