விவேகசிந்தாமணி 41-60

விக்கிமூலம் இலிருந்து

விவேகசிந்தாமணி[தொகு]

பாடல்: 41 (கொண்டநற்)[தொகு]

கொண்டநற் கனவுக ளோடு குணமிலாக் கோதை மாரைக்  ??
கண்டுவிண் டிருப்ப தல்லால் கனவிலும் புல்ல ஒண்ணாது
உண்டென மதுவை யுண்ண வோவியப் பூவில் வீழ்ந்த
வண்டினம் பட்ட பாடு வருந்திடப் படுவர் தானே.


பாடல்: 42 (மயில்குயில்)[தொகு]

மயில்குயில் செங்கா லன்னம் வண்டுகண் ணாடி பன்றி
அயிலெயிற் றரவு திங்க ளாதவ னாழி கொக்கோடு
உயர்விண் கமலம் பன்மூன் றுறுகுண முடையோர் தம்மை
யியலுறு புவியோர் போற்று மீசனென் றெண்ண லாமே.



பாடல்: 43 (தெருளிலாக்)[தொகு]

தெருளிலாக் கலைஞர்தம் தேர்விலாத் தன்மையும்
பொருளிலிலா வறிஞர்தம் பொறியெலா மடக்கமும்
அருளிலா வறிஞர்தம் அசைவிலா மௌனமும்
கருவிலா மங்கையின் கற்பொ டொக்குமே.


பாடல்: 44 (சந்திரனில்லா)[தொகு]

சந்திர னில்லா வானம் தாமரை யில்லாப் பொய்கை
மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை
பண்டித ரில்லாச் சங்கம் பாலக ரில்லா வாழ்வு
தந்திக ளில்லா வீணை தனமிலா மங்கை போலாம்.

பாடல்: 45 (குரைகடல்)[தொகு]

குரைகடல் வறுமையும் குறத்தி உண்மையும்
நரையற மருந்தையுண் டிளமை நண்ணலும்
விரைசெறி குழலிவேசி ஒருவனை யெண்ணலும்
அரைசரின் அன்பறா வாக்கமு மரியதே.


பாடல்: 46 (பொருளில்லார்க்)[தொகு]

பொருளில்லார்க் கின்ப மில்லை புண்ணிய மில்லை யென்றும்
மருவிய கீர்த்தி யில்லை மைந்தரின் பெருமை யில்லை
கருதிய கரும மில்லை கதிபெறு வழியு மில்லை
பெருநிலந் தனில்சஞ் சாரப் பிரேதமாய்த் திரிகு வாரே.


பாடல்: 47 (தூம்பினில்)[தொகு]

தூம்பினில் புதைந்த கல்லும் துகளின்றிச் சுடர்கொ டாது
பாம்புக்குப் பால்வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா
வேம்புக்குத் தேன்வார்த் தாலும் வீணதாம் கசப்பு மாறா
ஆம்பல நூல்கற் றாலு மற்பர்தான் மேலோ ராகார்.



பாடல்: 48 (தேளதுதீயில்)[தொகு]

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடா தெடுத்த பேரை
மீளவே கொடுக்கி னாலே மீண்டுமே கொட்டல் போலே
ஏளனம் பேசித் தீங்கை யென்றுமே செய்து வாட்டும்
கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்ற மாமே.



பாடல்: 49 (அறிவுளோர்)[தொகு]

அறிவுளோர் தம்மை நாளு மரசருந் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியி லுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்
நெறியுளோ ரவர்க்கி யாதோர் நலிவுதான் வருமே யாகில்
சிறியரென் றிகழ மாட்டார் குறுமதி யற்றோர் தானே.


பாடல்: 50 (குருவுபதேச)[தொகு]

குருவுப தேச மாதர் கூடிய வின்பந் தன்பால்
மருவிய நியாயங் கல்வி வயது தான்செய்த தர்மம்
அரிய மந்திர விசார மாண்மை யிவைக ளெல்லாம்
ஒருவருந் தெரிய வொண்ணா துரைத்திடி லழிந்து போமே.


பாடல்: 51 (இடுக்குற)[தொகு]

இடுக்குற வறுமை யாகி யேற்பவர்க் கிசைந்த செல்வங்
கொடுப்பதே மிகவு நன்று குற்றமே யின்றி வாழ்வார்
தடுத்ததை விலக்கி னோர்க்குத் தக்கநோய் பிணிக ளாகி
உடுக்கவே உடையு மின்றி யுண்ணவு மருமை யாமே.


பாடல்: 52 (மெய்யதைச்)[தொகு]

மெய்யதைச் சொல்வாராகில் விளங்கிடும் மேலும் நன்மை
வையக மதனைக் கொள்ளும் வானுளத் தேவ ராவார்
பொய்யதைச் சொல்வா ராகில் போசன மற்ப மாகும்
நொய்யவ ரிவர்க ளென்று நோக்கிடா ரறிவுள்ளோரே.


பாடல்: 53 (தந்தையுரை)[தொகு]

தந்தையுரை தட்டினவன் தாயுரை யிகழ்ந்தவன்
அந்தமுறு தேசிகர்தம் மாணையை மறந்தவன்
சந்தமுறு வேதநெறி தாண்டின இந்நால்வர்
செந்தழலின் வாயினிடை சேர்வது மெய்யாமே.


பாடல்: 54 (நாரிகள்வழக்கா)[தொகு]

நாரிகள் வழக்கா னாலும் நடுவறிந் துரைப்பார் சுத்தர்
ஏரிபோல் பெருகி மண்மே லிருகண்ணும் விளங்கி வாழ்வார்
ஓரமே சொல்வா ராகி லோங்கிய கிளையு மாண்டு
தீரவே கண்ணி ரண்டுந் தெரியாது போவர் தாமே.


பாடல்: 55(ஏரிநீர்நிறைந்த)[தொகு]

ஏரிநீர் நிறைந்த போதிருந் திட்ட பட்சி யெல்லாம்
மாரிநீர் வறண்ட போது மற்றவை யிருப்ப துண்டோ
பாரினை யாளும் வேந்தன் பரிவுற மறந்தா னானால்
யாருமே நிலையில் லாம லவரவ ரேகு வாரே.


பாடல்: 56 (மண்ணார்சட்டி)[தொகு]

மண்ணார் சட்டி கரத்தேந்தி மரநாய் கௌவும் காலினராய்
அண்ணாந் தேகி யிரப்பாரை யறிந்தோ மறிந்தோ மம்மம்மா
பண்ணார் மொழியார் பாலடிசில் பைம்பொற் கலத்தில் பரிந்தூட்ட
உண்ணா நின்றபோ தொருவா யுதவா மாந்த ரிவர்தாமே.


பாடல்: 57 (மண்ணுள்மாந்தர்)[தொகு]

மண்ணுள் மாந்தர் பாவம் மன்னரைச் சென்று சேருந்
திண்டிரள் மன்னர் பாவத் தீங்குமந் திரியைச் சேருந்
தொண்டர்கள் செய்த பாவந் தொடர்ந்துதம் குருவைச் சேருங்
கண்டன மொழியாள் பாவங் கணவர்க்குச் சேருந் தானே.


பாடல்: 58 (நற்குணமுள்ள)[தொகு]

நற்குண முள்ள வேந்தை நயந்து சேவித்த லொன்று
பொற்புடை மகளி ரோடு பொருந்தி யேவாழ்த லொன்று
பற்பல ரோடு நன்னூல் பகர்ந்து வாசித்த லொன்று
சொற்பெறு மிவைகள் மூன்று மிம்மையிற் சொர்க்க மாமே.


பாடல்: 59 (நிட்டையிலே)[தொகு]

நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த பெரியோர்கள் நிமலன் றாளைக்
கிட்டையிலே யடுத்துமுத்தி பெறுமளவும் பெரியசுகங் கிடைக்கும் காம
வெட்டையிலே மதிமயங்குஞ் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்துசுடு காட்டினிலே கிடத்துமட்டுங் கவலை தானே.


பாடல்: 60 (ஆவீனமழை)[தொகு]

ஆவீன மழைபொழிய வில்லம் வீழ வகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள்வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் பாவிமகன் படுந்துயரம் பார்க்கொ ணாதே.


விவேகசிந்தாமணி01-20
விவேகசிந்தாமணி 21-40
விவேகசிந்தாமணி 81-100
விவேகசிந்தாமணி
விவேகசிந்தாமணி
[[]] [[]] [[]] [[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=விவேகசிந்தாமணி_41-60&oldid=12466" இலிருந்து மீள்விக்கப்பட்டது