குறட்செல்வம்/மனிதனும் மரமும்

விக்கிமூலம் இலிருந்து


11. மனிதனும் மரமும்


வறண்ட பாலைவனம்!

நீருற்றின் சாயலே இல்லாத நிலப் பரப்பு. அந்தப் பாலைவனத்தில் ஒரு பட்டமரம்! அது தளிர்த்தது!

என்ன, திகைக்கிறீர்களா? நாம் சொல்வது வியப்பாக இருக்கிறதா?

ஆம் மேலே சொன்னவை நடக்கக் கூடாதவை. நடக்க முடியாதவை என்பதற்கு எடுத்துக் காட்டுக்கள். அதுபோலவே, அகவாழ்வில் அன்பைப் பேணி வளர்க்காதவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமில்லை! அவர்கள் செல்வத்தால் செழிக்க முடியாது! புகழால் பீடுநடை போட முடியாது.

தமிழனின் மரபுப்படி நிலம் நான்குதான். அவை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியன. ஐந்தாவது நிலம் ஒன்றுண்டு! அதுதான் பாலை. ஆனால் பாலை, இயல்பாக இருப்பதல்ல. நான்கு நிலங்களின் திரிபாலும் மாறுபாட்டாலும் தோன்றுவதுதான்் பாலை.

இத்தகு மாறுபாட்டின்—திரிபின் காரணமாக வளம் தருகின்ற பொருள்களின் உறவிலிருந்து நிலம் ஒதுங்குவதனால், வளத்தைப் பெறவோ, தரவோ முடியாத வறட்சி நிலை ஏற்பட்டு விடுகிறது. வளம் பெறுதலும் தருதலும் ஆகிய சூழல் அல்லது கடமைப்பாடு என்ற இயற்கை நியதியிலிருந்து மரம் விலகி விடுதலின் காரணமாகப் பயன் தராத—பெறாத நிலையில் அது வற்றிப் போய் விடுகிறது.

அது போலவே, கொண்டும் கொடுத்தும், அன்பும் உறவும் காட்டி, கூடிவாழ வேண்டிய மனிதன், அன்பு காட்டும் ஒழுக்க நெறியிலிருந்து விலகியவனின் சுற்றுச் சூழல் வறண்ட பாலைவனமாகி விடுகிறது. அன்பை சொரிதற்குரிய வாய்ப்பையும், அன்பைப் பெறுதற்குரிய வாய்ப்பையும் அவன் இழந்து விடுகின்றமையின் காரணமாக வற்றல் மரம்போலச் சாரமற்றவன் ஆகிவிடுகிறான்.

வற்றல் மரம் எப்படித் தளிர்க்காதோ, அதுபோலவே மணத்தகத்தே அன்பில்லாதவனின் வாழ்க்கை சிறக்காது. ஆதலால், மற்றவர்களிடத்தே மனங் கலந்த அன்பு காட்டுவதே வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுதற்குரிய வழி என்பது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி. ஆம், பிறரை வாழ்வித்து வாழ்தலும், மகிழ்வித்து மகிழ்தலுமே நல்வாழ்க்கையின் இயல்பு என்ற உண்மையினை அழகாக உவமையின் மூலம் வள்ளுவர் நமக்கு உணர்த்துகின்றார். இதோ குறளைப் பாருங்கள்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.