பக்கம்:இலக்கியக் கேணி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. பரிப் பெருமாள்

ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின்-போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

-நத்தத்தனார்.

பலவுரை யுடையன

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து" நல்லிசைப் புலவர்கள் அருளிய பல திறத்த நூல்களுள் மறைந்தனபோக எஞ்சியிருக்கும் நூல்கள் பல. அவற்றுள் தொன்மைச் சிறப்போடு ஈடும் எடுப்புமின்றித் திகழ்வது, பேரிலக்கண நூலாகிய தொல்காப்பியம். இந்நூல் முழுமைக்கும் இளம் பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர்; சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் தெய்வச் சிலையார் உரைகளும் உண்டு; பேராசிரியருரை பொருளதிகாரம் பிற்பகுதிக்கு மட்டும் கிடைத்துள்ளது. திருமுருகாற்றுப்படை சங்ககாலத்து எழுதப் பெற்ற சமய இலக்கியம். இதற்கு நச்சினார்க்கினியர், உரையாசிரியர், பரிமேலழகர், பரிப்பெருமாள், பரிதியார் என்பவ ருடைய உரைகள் உள்ளன; பழைய உரை என்றும் ஒன்றுள்ளது. வைணவ சமயத்து ஆழ்வார்களுள் நம்மாழ்வார் ஒருவர். அவர் பாடியது திருவாய்மொழி அதற்கு ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, இருபத்து நாலாறாயிரப்படி, முப்பத்தாயிரப்படி என்று பலவுரைகள்