பக்கம்:எழில் விருத்தம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



40

வாணிதாசன்

ஆலை மாடென மற்றவர் நலம்பெற
     அடிக்கடி நாடோறு
வேலை செய்திடு கூலிகள் ஏழையர்
     வியர்வையின் பரிசாக
மாலை தந்திடு சிறுபொருள் வாங்கிடு
     மனத்தினில் தெளிவில்லாக்
கூலி ஆட்களின் கொதிமனம் போலொளி
     குன்றிய குளிர்மாலை!............................................. 9

தெங்கு மாவினில் செவ்வொளி மங்கிடத்
     தெருவினில் நீர்தெளித்து
மங்கை மெல்லியர் வாழ்மனை கூட்டியே
     மாவினார் கோலமிட்டுச்
செங்கை ஏந்திய விளக்கினை நீள்கடைத்
     திண்ணையின் மேலேற்றிக்
கங்குல் நீக்கிடு திங்களை வாழ்த்திடு
     கவின்மிகு கார்மாலை!........................................... 10

"குறிய ஈற்றுமாக் கூவிள முவவிளங்
          காயொடுங் குறிகொள்ளே"

என்னும் 'விருத்தப் பாவியல்' நூற்பாவுக்குகேற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். காயொடும் என்பது மாங்காய் என அறிக.