பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கற்பனைச்சித்திரம்



"யார் நீங்கள் ?"

"நானா? நீ யாருடாப்பா? புதிசோ? ஏற்பாடே புதிசாகத்தான் இருக்கு நான் அவருக்குச் சிநேகிதன்" என்று சுகானந்தம் பதில் கூறினார். கூறிவிட்ட பிறகு யோசித்தார், 'அவர், இவர்.' என்றல்லவா கூறவேண்டி வந்து விட்டது, நம்ம தனபாலுவை, என்று, கொஞ்சம் கோபமும் அடைந்தார்.

"நீங்க யாரைப் பார்க்கவேண்டும்?” என்று கேட்டான், காவற்காரன். என்ன சொல்ல முடியும்? தனபாலுவை, என்று சொல்வதா மரியாதையாக இருக்குமா? உடனே, சுகானந்தம், "நான் தனபாலச் செட்டியாரைப் பார்க்க வேண்டும்" என்று கூறினார். கூறிவிட்டு, மறுவிநாடி யோசிக்கலானார் 'செட்டியார்' என்று கூற நேரிட்டதே நம்ம தனபாலுவை; நாமும் அவனும் எவ்வளவு அன்யோன்யமாகப் பழகினோம், 'ஒரே கடையிலே இருந்திருக்கிறோம், ஒரே வியாபாரம் செய்தோம் இன்று அவன் ஒரு பணக்காரனாகி விடவே, நாமே அவனைச் "செட்டியார்" என்று சொல்லவேண்டி நேரிட்டது', என்று கோபந்தான். அந்தக் கோபம் மேலும் அதிகரித்தது, 'இங்கேயே இரு! உள்ளே போய், "ஐயா"வைக் கேட்டுவிட்டு வருகிறேன்.' என்று சொல்லிவிட்டு, வேலையாள் உள்ளே போனபோது. "ஐயா"வாம், ஐயா? இவனுக்கு அவன் ஐயா, எனக்கென்ன? சே! நாம் இவனைப் பார்க்கவருவதே தவறு, பேசாமல் போய்விடுவோம்" என்றும் நினைத்தார். ஆனால் ஒரு யோசனை வந்தது, வந்ததே வந்தோம், இந்தத் தடவை மட்டும் தனபாலுவைப் பார்த்து இங்கே நடக்கும் அமுலைப்பற்றிச் சொல்லிக் கண்டித்துவிட்டுப் போய்விட வேண்டும், என்று தீர்மானித்தார்.

'ஏம்பா, தனபாலு! அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்தராத்திரியிலே குடை பிடித்து நடப்பான் என்பார்களே,