114
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இறைவா! தண்ணிலவு பொழிகிறது. எவ்வளவு தண்மை. தண்ணிலவு, உயிர்களிடத்தில் எழுப்பும் உணர்வுக் கிளர்ச்சிகளை ஏட்டில் எழுத இயலுமா? இறைவா! தண்ணிலவுக்கு இந்த ஆற்றல் எப்படிக் கிடைத்தது? நின் முடியைச் சார்ந்ததனால்தானே? அது மட்டுமல்ல, இறைவா! ஒளிக்கதிர் அனைத்தும் கதிரவன் தந்தது. இறைவா, சேர்வாரோடு சேர்ந்தால் அனைத்தும் நன்றாக நிகழும்.
இறைவா, எனக்கும் உன்முடியில் இடம் கொடுக்கக் கூடாதா? கேட்டவர்களுக்குத்தான் உன் முடியா? இறைவா, நீயாக இடம் அருளிச் செய்தால் எதுவும் நன்றாக அமையும். நானாகக் கேட்டால் அது நன்மையாக அமையாது. நான்முகன் முடி தேடினான். முடிந்ததா, என்ன? முடிவு, குடியிருக்கக் கோயில் இல்லாது போனான். அதனால் இறைவா, நான் கேட்கவில்லை, நீயாக அருள் செய்!
இறைவா, நின் முடியினும் நின் தாள்கள் ஆற்றலுடையன. நின் தாள்களிலேயே மூவுலகும் முகிழ்த்தன. நின் தாள்களிலேயே இசையும் கூத்தும் அடங்கியுள்ளன. நின் தாள்களே மரணமிலாப் பெருவாழ்வு தருவன.
ஆதலால் இறைவா, நின் திருவடிகளை நினைந்து நினைந்து வாழ்ந்திட அருள் செய்! நின் திருவடிகளை என் இதயத்தில் பதித்து வை. இறைவா, நான் ஏழேழ் பிறப்புகளிலும் நின் திருவடி பதிந்த நெஞ்சுடன் வாழ அருள் செய்க!