திருவருட்சிந்தனை
243
இறைவா, அமரர்கள் சூழ இருந்தருளும் இறைவா! நான் தனியனாக உள்ளேன்! என் தனிமை தாங்க முடியாமல் நட்பினை நாடி அலைகின்றேன்! நட்பு சாதாரணமானதா?
இறைவா, என் வாழ்வின் உயர்வும், தாழ்வும், வெற்றியும், தோல்வியும், ஈட்டமும், இழப்பும் நான் பெறும் நட்பில் தான் அமைகின்றன. "ஆமாம் சாமிகள்” நட்பினராய் வந்தமையால் மோசம் வந்து விட்டது என்று பொருள்.
இறைவா, நான் வளர, வாழ்ந்திட எனக்கு நட்பு தேவை. அப்படியானால் நான் பெறக்கூடிய நட்பு என்னிலும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும். அதே போழ்து உயர்வு நிலை கருதாது என்னுடன் எளிமையாக வேறுபாடின்றிப் பழகுபவராகவும் அமைதல் வேண்டும்.
நல்ல நட்பு, வாழ்க்கைக்கு இன்றியமையாத உறுப்பு. நட்புள்ள வாழ்க்கையில் துன்பம் குறையும்; துணிவு சிறக்கும்! "பெரியாரோடு நட்பு இனிது” என்று தேவாரம் சிறப்பித்துக் கூறும். பெரியோருடன் எனக்கு நட்புத் தேவை. இறைவா, அருள் செய்க!
கற்றல் கேட்டலுடைய பெரியோருடன் நட்புக் கூட்டியருள்க! சீலத்தில் சிறந்து விளங்குவாருடன் நட்பு இனிதாகச் சேர்த்தருள்க! செயற்கரிய செயல் செய்யும் திறனுடையாருடன் நட்புக் கூட்டியருள்க! நின்னை மறவாத அடியாருடன் நட்புக்காட்டி இணைத்தருள்க! நான் பிழைத்திட இதுவே வழி! நான் இப்பெரியோர் நட்பைப் பேணி பாதுகாத்துக் கொள்கிறேன்!
இறைவா, நீ நட்புக்காட்டி, நட்பினை ஏற்படுத்தித் தந்தருள்க! பெரியோர் நட்பு இனிது! இம்மைக்கும் இனிது! மறுமைக்கும் இனிது! இறைவா, பெரியோர் நட்பினை எனக்கருளி இன்பம் சேர்த்திடுவாயாக! இறைவா, அருள் செய்க!