பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 15



இறைவா, என்மீது முழு அதிகாரம் செலுத்தி, முழுச் சுதந்தரம் அடைய அருள்செய்க!

இறைவா, பரிபூரண சுதந்தரம் உடையவனே! எல்லாவற்றையும் வைத்து வாங்கும் அதிகாரமுடைய ஊழி முதல்வனே! போற்றி! போற்றி!! இறைவா, என் வாழ்க்கையில் சுதந்தரத்தின் சுவை இல்லவே இல்லை!

"ஆடுவோம், பள்ளுப்பாடுவோம்! ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோம்” என்று. ஆனால் சுதந்தரம் என்பது இன்னது என்று எனக்கு இதுவரையில் தெரியாது! சத்தியமாகத் தெரியாது! மன்னித்துக் கொள்!

சுதந்தரத்தின் அனுபவம் இல்லை! "அதிகாரச் சுவையையாவது அனுபவித்தது உண்டா?” என்று கேட்கிறாய் இறைவா! ஐயகோ, அதிகாரமா? அப்படியென்றால் என்ன? இறைவா, அதிகாரமும் எனக்குத் தெரியாது! ஆனால், இறைவா, சில சமயங்களில் சில உத்தரவுகள் போடுவேன்! சிலர் மீது கோபிப்பேன்! இதற்கெல்லாம் அப்படியொன்றும் விளைவுகள் இருந்து விடுவதில்லை.

இறைவா, ஒருவன் முழு அதிகாரம் உடையவனாக இருந்தால் முழுச் சுதந்தரத்தை அனுபவிப்பான்! இறைவா, நன்றருளிச் செய்தனை! முழு அதிகாரம்! என் பொறிகள், புலன்கள், பழைய பழக்கங்கள், மரபுகள், சமூக நிர்பந்தங்கள் ஆகியவற்றிலிருந்து என் ஆன்மா முழுச் சுதந்தரத்தை அடைதல் வேண்டும்.

இந்த முழுச்சுதந்தரம் எனக்குக் கிடைத்த பிறகு எனக்கு முழு அதிகாரம் கிடைக்கும்! முழு அதிகாரமும் முழுச் சுதந்தரமும் இணை! ஒன்றேயொன்று பிரிக்க இயலாதவை. அப்படியா, இறைவா!

நான் இன்றுமுதல் என் வாழ்க்கையில் அனுசரிக்க முயலுகின்றேன்! நான் முழுச்சுதந்தரம் வழங்குவேன்! இறைவா, அருள் செய்க!