310
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அக்டோபர் 20
|
இறைவா, மூலநோய் தீர்க்கும் முதல்வா! மருந்தீசன், வைத்தியநாதன் என்றெல்லாம் திருநாமம் கொண்ட இறைவா! நோயற்ற உடல் தந்தருள் செய்க!
உடல் ஒரு உழைப்புக் கருவி! நுகர்வுக் கருவி! எனது உயிரின் வளர்ச்சிக்கு உற்ற துணையாய் அமைந்த கருவி. இந்த உடல் வாழ்க்கை, பூரணமாய்ப் பயன் பெற வேண்டும்! இறைவா, கழிபிணியில்லா யாக்கையை அருள் செய்க!
இறைவா, நோயில்லாமல் வாழ்ந்தால் மட்டும் போதாது. எப்போதும் என் உடல், உழைப்பிற்கு ஆயத்தமாய் இருத்தல் வேண்டும். எனது பொறிகள் எப்போதும் விழிப்பு நிலையில் இருந்து உயிருக்கு ஆக்கம் சேர்க்க வேண்டும்.
இறைவா, உடலை நோயனுகாது தடுத்தருள் செய்ய வேண்டும். இறைவா, அருள் பாலித்திடு! நல்லுடல் நயந்தருள் செய்க! எப்போதும் விழிப்பு நிலையில் உள்ள உடலினை அருள் செய்க!
ஓயாது உழைத்திடும் வலிமையை உடலினுக்கு அருள் செய்க! உழைத்தல் தவம்! உழைத்தல் நோயணுகாப் பாதுகாப்பு நெறி!
உடல், நீ எழுந்தருளும் திருக்கோயில்! உடலைப் போற்றுதல் என் கடமை என்ற அறிவைக் கொடு.
இறைவா, நோயணுகா வாழ்க்கை முறையில் என்னைப் பழக்கு என் ஆக்கமும் அழிவும் உடல் நலத்தில் இருக்கிறது இறைவா, உடலைப் போற்றும் அறிவினைத் தந்தருள் செய்க!