பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவருட் சிந்தனை

311



அக்டோபர் 21
இறைவா, உழைத்தலே தவமாகும் உத்தம வாழ்வினை
அருள்க !

இறைவா, பல்லூழிக்காலமாக ஐந்தொழில் இயற்றிடும் தலைவா! நாளும் ஒயாது உழைத்திட வேண்டும். படைப்பாற்றல் மிக்க தொழில் செய்யவேண்டும். இறைவா, அருள் செய்க!

இறைவா, எப்போதும் உழைப்பிற்குரிய விழிப்பு நிலையில் வாழ்ந்திடுதல் வேண்டும்! உழைப்பிற்குரிய ஆயத்த நிலையில் வாழ்தலே வெற்றிகளைக் குவிக்கும்! ஊக்கம் உடையோனாக வாழ்ந்தாலே போதும். எல்லாப் பொருள்களையும் நுகரலாம்!

உழைப்பில்-பணியில் வேற்றுமை பாராட்டாமல் உழைக்கும் உளப்பாங்கு தேவை! உடலுழைப்பே உயர்வுடையது என்றருள் செய்யும் இறைவா. உழத்தல் போன்று உழைத்தலே உழைப்பு.

கழனியில் சேறு ஆவதற்கு மாடு திரும்பத் திரும்ப உழைத்தலைப் போல உழைத்திடும் மனப்பாங்கினை அருள் செய்! இறைவா, உழைத்து உண்ணும் ஒழுக்கத்தினை அருள் செய்க!

உளமார உழைத்தலே யோகமாகும். உடல் வருந்த உழைத்தலே தவமாகும்! உழைப்பில் மகிழும் வாழ்க்கையைத் தா!

இறைவா, காலங்காட்டும் கடிகாரத்தைப் போலச் சுழன்று சுழன்று சுறுசுறுப்பாக உழைக்கும் வரத்தினைத் தந்திடுக. உழைப்பால் மண்ணகத்தை விண்ணகமாக்கிடும் ஆற்றலைத் தந்தருள் செய்க!