பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

50 உறைதல் -உஜ்ஜயினி


உறைதல்: பனிக்கட்டியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். தண்ணீரை மேன்மேலும் குளிர வைத்தால், அது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பனிக்கட்டியாக மாறுகின்றது. இப்படித் திரவப்பொருள் திடப்பொருளாக மாறுவதைத்தான் உறைதல் என்று சொல்லுகிறோம்.

சிறு தொட்டியில் பனிக்கட்டிகளையும் உப்பையும் கலந்து நிரப்பி, நடுவில் கண்ணாடிக் குழாய் ஒன்றைச் செருகி, அதில் தண்ணீர் ஊற்றினால் இந்தத் தண்ணீரும் உறைந்து பனிக்கட்டியாக மாறிவிடும். வெப்பமானியை இந்தப் பனிக்கட்டியில் வைத்தால், அது 0° யைக் காட்டும்.

தண்ணீர் 0° வெப்பநிலையில் பனிக்கட்டியாக உறைந்துவிடும் என்று இதனால் தெரிகிறது. இக்குழாயை வெளியே எடுத்துத்தண்ணீரில் அமிழ்த்தினால் அதற்குள் இருக்கும் பனிக்கட்டி உருகத் தொடங்கும். பனிக்கட்டி முழுவதும் உருகிய பிறகுதான் வெப்பமானி 0 டிகிரிக்கு மேல் ஏறத் தொடங்கும்.

தண்ணீர் உறையும் நிலையும், பனிக்கட்டி (உறைந்த நிலையிலுள்ள தண்ணீர்) உருகும் நிலையும் ஒன்றுதான் என்று இச்சோதனையால் நாம் அறிகின்றோம்.

மெழுகு, கண்ணாடி ஆகியவற்றைப் போன்ற பொருள்களைக் காய்ச்சினால் அவை மெல்ல மெல்லத்தான் உருகும். முதலில் அவை வெண்ணெய் போலாகும். பிறகு தண்ணீர்போல ஓடும். இவற்றுக்கு உருகும் நிலை இன்னதென்றும், உறையும் நிலை இன்னதென்றும் திட்டமாகக் கூற முடியாது.

எந்தப் பொருளும் உறையும்போது தன் அளவில் குறையும். ஆனால் தண்ணீர் மட்டும் உறையும்போது தன் அளவில் அதிகமாகும். பாறைப்பிளவுகளில் தேங்கியுள்ள தண்ணீர் உறைந்தால் தன் அளவில் அதிகமாகின்றது. அதனால் பாறையின் பிளவும் அதிகமாகும். அதிகமாகும். அழுத்தத்தினால் பனிக்கட்டி உருகும். அழுத்தம் குறைந்தால் அது மீண்டும் உறைந்துவிடும்.


உறைபனி (Frost ) : மார்கழி, தை மாதங்களில் குளிர் அதிகம். உயர்ந்த மலைகளின்மேல் குளிர் மிகவும் கடுமையாக இருக்கும். உதகமண்டலம் சுமார் 2,300 மீட்டர் உயரம். குளிர்காலத்தில் அவ்வூரில் குளிர் கடுமையாக இருக்கும். அங்கு வெப்பமானி சில சமயம் 0° காட்டும். வெப்பநிலை இதற்குக் கீழேயும் இறங்குவதுண்டு. அத்தாள்களில் புல்வெளிகளின் மேல் உறைபனி வெள்ளை வெளேரென்று படித்து கிடக்கும். உப்பை வாரி இறைத்ததைப் போலவும், பஞ்சைத் தூவியதைப் போலவும் அக்காட்சி பார்க்க மிக அழகாக இருக்கும்.

காச்மீரத்தில் ஒரு காட்சி. எங்கும் உறைபனி வெள்ளை வெளெரென்று படிந்து கிடக்கிறது.

சம தட்பவெப்ப நாடுகளிலும் உறைபனி பெய்யும். அவ்விடங்களில் அது பல வகையான பூ வடிவங்களில் படியும். வெயில் வந்தவுடன் உறைபனி உருகிவிடும்.

காற்றில் நீராவி கலந்துள்ளது. இரவில் அது குளிர்ந்து தண்ணீர்த் துளிகளாகின்றது. இத்துளிகள் காற்றைவிடக் கனமானவை; ஆகையால் தரையின் மேல் உதிர்கின்றன; உடனே பனியாக உறைந்து விடுகின்றன. இரவில் காற்றடித்தால் உறைபனி பெய்யாது.

பயிர்களுக்கும், பழ மரங்களுக்கும் உறைபனியால் தீங்கு நேரும். ஆகையால் அவற்றைத் துணியினால் மூடிவிடுவார்கள். புகை எழுப்பியும் அவற்றுக்கு வெப்ப மூட்டுவதுண்டு.


உஜ்ஜயினி: இந்தியாவின் புகழ்பெற்ற புண்ணியத் தலங்களுள் உஜ்ஜயினி ஒன்று. இந்நகரம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. புராணங்களிலும், பண்டைய வரலாற்றிலும் இந்நகரம் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் அவந்தி, மாளவம் ஆகிய நாடுகளின் தலைநகராக இது விளங்கியது. வடமொழி நூல்களிலும் சிலப்பதிகாரம், யசோதர காவியம், பெருங்கதை முதலிய தமிழ் நூல்களிலும் இந்நகரத்தைப் பற்றிய அழகான வருணனை உண்டு. தமிழ் நூல்களில் இந்த நகரத்திற்கு உஞ்சை அல்லது உஞ்சேனை என்று பெயர். சிவன் கோயில் ஒன்று இங்கு உள்ளது. அழகிய ஓவியங்கள் சிற்பங்கள் நிறைந்த கோயில்களும், மசூதிகளும், அரண்மனைகளும் இங்கு நிறைய உள்ளன. விக்கிரமாதித்தன் கதைகள்(த.க.) சிலவற்றை நீங்கள் படித்திருக்கலாம். அம்மன்னனைப் பற்றிய கதைகள் மிக வேடிக்கையானவை. விக்கிரமாதித்தனுக்கு உஜ்ஜயினி தலைநகராக இருந்தது.