பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


ஜவஹர் சொன்னார், சென்ற திங்கள், பெங்களூரில். வில் அம்பு வைத்துக் கொண்டு பழங்காலத்திலே சண்டை செய்தார்கள் என்பதற்காக இன்று ராணுவத்துக்கு அந்த ஆயுதமா தர முடியும்! அல்லது தான் பழங்காலத்தின் படி பெங்களூரிலிருந்து டெல்லிக்கு மாட்டு வண்டியிலா பயணம் செய்ய முடியும்! இப்படி யாரும் யோசனை கூற மாட்டார்கள். ஆனால் சமுதாய சம்பந்தமான பிரச்சினைகளிலே நம்மவர் பலருக்கு, மாட்டு வண்டிக் கால மனப்பான்மை இன்றும் இருக்கிறது என்று சொன்னார் சோகத்துடன்.

இருபதாம் நூற்றாண்டு வாழ்க்கை வசதிகள் அவ்வளவையும் ஒன்று விடாமல் அனுபவிக்கிறோம். சமுதாய அமைப்பு, விக்கிரமாதித்யன் காலத்ததாக இருப்பது பொருந்துமா! ஆட்டுக் குட்டியை ஏற்றிச் செல்லவா ஆகாய விமானம்!

சமுதாயத்திலே புதிய துறைகள். அதன் அமைப்பிலே புதியதோர் மாற்றம் தேவை. அந்தப் புதிய உருவத்தை உருவாக்கும் உயரிய பணிதான் மறுமலர்ச்சி. அதன் அவசியத்தை மிகப் பெரும்பாலான மக்களுக்கு உணர்த்துவிக்க நாடகமே. நல்ல கருவி. எனவே நாடகத்தில் மறுமலர்ச்சி மிக மிக முக்கியமானது, நாட்டின் விழிப்புக்கு அது நல்லதோர் அளவுகோல், நாளை நாம் எப்படி இருப்போம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.