பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

100



“குடி அரசு” ஒரு ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளுக்குப் பதில் சொல்லவோ, மறுக்கவோ எதிரணியினருக்கு எத்தனையோ பத்திரிகைகள் இருந்தன. அவைகளின் வாதங்களை, எதிர்ப்புகளை முனைமழுங்கச் செய்யக் "குடி அரசு" இதழில் பெரியார் சித்திரபுத்திரன் என்ற புனைபெயரில் எழுதும் கட்டுரைகளுடன், மாபெரும் தர்க்கவாத ஆராய்ச்சி நிபுணர்களும், மேதைகளும், அறிவாளிகளுமான சாமி கைவல்யம், சந்திரசேகரப் பாவலர், சாமி சிதம்பரனார், எஸ். குருசாமி போன்றோரின் பகுத்தறிவு விளக்கங்களும் நிரம்ப இடம் பெற்று வந்தன. இராமாயணம், பெரியபுராணம், பாரதம் இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து, அவற்றிலுள்ள பொருந்தாக் கதைகளையும், புரட்டுகளையும் அம்பலப்படுத்தியது “குடி அரசு".

சுயமரியாதை இயக்கத்துக்குத் தஞ்சை மாவட்டம் தந்த பங்குவீதம் அதிகமாயிருந்தது. பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சள் அழகர்சாமிக்கு நிகரான மேடைப் பேச்சாளர் அக்காலத்தில் எவருமிலர். மூன்று மணி நேரத்துக்குக் குறையாமல் நெடிதுயர்ந்த கம்பீரமான உருவத்துடன் கணீரென்ற வெண்கலக் குரலெடுத்துச் சொன்மாரி பொழிவார். கேட்டோர் உணர்ச்சிப் பிழம்புகளாய் உருகி மெய்ம்மறந்து கிடப்பர். அநேக மேடைப் பேச்சாளர்கள் தங்கள் முதல்முயற்சிக்கு அவரையே முன்மாதிரியாகக் கொள்வர். கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் இரா. நெடுஞ்செழியன் ஆகியோரைப் பிற்காலத்தில் எடுத்துக் காட்டாகக் கூறலாம். கடைசிவரை பெரியாரின் முகாமிலேயே இருந்தவர். பேசிப் பேசி இரத்தம் கக்கி, 1949-ஆம் ஆண்டு தஞ்சையில் இயற்கை எய்தினார்.

குருவிக்கறம்பை எஸ். குருசாமி ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் புலமை மிக்கவர் அரசியல் விஷய ஞானம் அபாரமாகப் பெற்றவர். பேச்சாளராக இவர் பெற்ற பெருமைகளைவிட எழுத்தாளராகவே இவர் சிறப்பான முத்திரை பொறித்துள்ளார். குத்தூசி என்ற புனைபெயரில் இவர் "விடுதலை" ஏட்டில் ஆசிரியராயிருந்து தீட்டியுள்ள கட்டுரைகள் ஈடு இணையற்றவை. இவர் 1962 வரையில் பெரியாருடன் வாழ்ந்தவர்.

முறையோடு தமிழ் பயின்று, இராசாமடத்தில் ஆசிரியப் பணியாற்றிய சாமி சிதம்பரனார், "குடி அரசு" இதழில் நெடுங்காலம் எழுத்துப் பணிபுரிந்தவர்; பெரியாரிடம் நீண்டநாள் தங்கியிருந்து, 1940 முதல் பிரிந்து வாழ்ந்தார். 1950-ல் பெரியாரிடம் திரும்பி வந்து மீண்டும் 1951-ல் "விடுதலை" நாளேட்டில் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். இறுதிவரை சுயமரியாதைக் கொள்கைகளைக் கைவிடவில்லை.