தந்தையும் மகளும்/90

விக்கிமூலம் இலிருந்து


90அப்பா! பாலில் நீர் சேர்த்தால் பாலின் அளவு கூடுகிறது, பாலில் சர்க்கரை சேர்த்தால் கூடவில்லை, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! எந்தப் பொருளையும் நாம் சிறிது சிறிதாகத் துண்டாக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இப்படித் துண்டு செய்வதற்கு எல்லையுண்டு. அதற்கப்புறம் துண்டாக்க முடியாது. அப்படித் துண்டாக்க முடியாமல் நிற்கும் கடைசித் துண்டை அறிஞர்கள் மூலக்கூறு என்று கூறுவார்கள். இந்த மூலக்கூறுகள் ஒன்றோடொன்று சேர்ந்து ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. ஒட்டிக் கொண்டிருப்பது போல் கண்ணுக்குத் தோன்றினாலும் அவற்றின் இடையே நுட்பமான இடைவெளிகள் இருப்பதாகவும் அந்த இடைவெளிகளில் அவை சதாகாலமும் ஆடி அசைந்து கொண்டு இருப்பதாகவும் கண்டு பிடித்திருக்கிறார்கள். அந்த இடைவெளிகள் கட்டிப் பொருள்களிலுள்ளவற்றைவிட திரவப் பொருளில் அதிகம். அதனால் அசைவானது கட்டிப் பொருளில் காணுவதைவிட திரவப் பொருளில் அதிகம், திரவப் பொருள்களில் காண்பதைவிட வாயுப் பொருளில் அதிகம்.

நாம் பாலில் சர்க்கரையை இடுகிறோம். பாலில் இடைவெளிகள் அதிகம். அதனால் சர்க்கரையின் மூலக்கூறுகள் பாலிலுள்ள இடைவெளிகளுக்குள் போகின்றன. பாலின் மூலக்கூறுகள் சர்க்கரையின் மூலக்கூறுகளை விட அதிகமாக அசைவதால் சர்க்கரையின் மூலக்கூறுகள் பாலின் இடைவெளிகளிலேயே அடங்கி விடுகின்றன. அதனால்தான் பாலில் சர்க்கரையை யிட்டால் பாலின் அளவு கூடுவதில்லை அதே காரணத்தினால்தான் சர்க்கரை கண்ணுக்குப் புலனாகாதிருக்கிறது.

ஆனால் பாலில் தண்ணீரைச் சேர்த்தால் இரண்டிலும் இடைவெளிகள் ஒன்று போலவே இருப்பதால் தண்ணீரின் மூலக்கூறுகள் பாலின் இடைவெளிகளில் நுழைந்து கொள்கின்றன. அதனால்தான் தண்ணீர கண்ணுக்குத் தெரிய வில்லை. எல்லாம் பால் போல் வெள்ளை நிறமாகவே தெரிகிறது.

ஆயினும் பாலின் மூலக்கூறுகளைப் போலவே தண்ணீரின் மூலக்கூறுகளும் அதிகமாக அசைவதால் அவை சர்க்கரை மூலக்கூறுகளைப் போல பாலின் இடைவெளிகளுக்குள் அடங்கி விடுவதில்லை. அதனால்தான் பாலில் தண்ணீர் சேர்ததால் பாலின் அளவு அதிகமாகத் தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/90&oldid=1538252" இலிருந்து மீள்விக்கப்பட்டது