124 நினைவு அலைகள் உயர் தொடக்கப் பள்ளியைத் தொடர்ந்து நடத்துவதோடு, ஆசிரியப் பள்ளி ஒன்றையும் அரசே தொடங்கி நடத்த வேண்டுமென்பது அந்த நன்கொடையாளர் கோரிக்கை அரசு மட்டத்தில் அலுவலர்கள், தொலை நோக்கின்றிக் காலதாமதம் செய்து வந்தனர். நமச்சிவாயர் மனம் சோர்ந்து இருந்தபோது, வேறு நிறுவனத்தார் நுழைந்து அந்த நன்கொடையைப் பெற்றுக் கொண்டு போய்விட்டனர். 16. முதியோர் கல்விப் பட்டறை 1955-56ஆம் ஆண்டில், இந்திய அரசின் துாண்டுதலோடும் முதியோர் கல்விப் பட்டறை உதவியோடும், முதலாவதாக - எழுத்து அறிவு பெற்ற வயது வந்தோர்க்கான, மடல், சுவடி நூல் ஆகியவற்றை எழுதி உருவாக்கும் பொருட்டு - ஒரு பட்டறை’ நடத்த நேர்ந்தது. ஒரு திங்கள்வரை நடந்த அந்தச் செயற்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் எவர்? பலதரப்பட்ட செயல் வீரர்கள். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர்கள் சிலர்; செய்தித்தாள் உலகில் பணி புரிந்தவர்கள் சிலர்; நாட்டுப்புற மேம்பாட்டுத் துறையில் ஈடுபட்டவர்கள் வேறு சிலர். அச் செயற்கூட்டம் கோவை, பீளைமேடு பி. எஸ். ஜி. கல்வி வளாகத்தில் நடந்தது. பி. எஸ். ஜி. அறக்கட்டளை, தங்கும் இடங்களையும், பணி புரியும் கூடங்களையும் நல்லபடி ஏற்பாடு செய்து கொடுத்தது. அதன் இயக்குநர் திரு. ஜி. ஆர். தாமோதரன் அப் பட்டறைக்குச் சென்று பார்த்து ஊக்குவித்தார். அப் பட்டறையை இயக்கியது யார்? ஒருவர் அல்ல; இருவர். சென்னை மாநில முதியோர் கல்வித் தனி அலுவலர் திரு. ஏ. ஜி. வில்வமும், பி. எஸ். ஜி கலைக்கல்லூரி முதல்வர் திரு. பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி நாயுடுவும் ஆவார்கள்.