பிரிட்டானியப் பயணம் 507 அன்று மற்றவர்களோடு அமர்ந்து, மலையாங்குளம் இராமானுஜம் (அய்யங்கார்) உணவருந்திய சமத்துவ உணர்வைப் பலரும் பாராட்டினர். பள்ளிகளே பாடத் திட்டம் தயாரிக்கும் திட்டமிட்டபடி நான் அக்டோபர் முதல் வாரத்தில் பிரிட்டனுக்குப் பயணமானேன். லண்டனில் அன்பான வரவேற்பு கிடைத்தது. பாலர் பள்ளிமுதல் பல்கலைக் கழகம்வரையிலே பார்க்கவும், புதியவர்களோடு பேசவும் செம்மையாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அதையொட்டி லண்டன்முதல் எடின்பரோவரை பல இடங்களுக்குச் சென்றேன். பல கல்வி நிலையங்களைக் கண்டேன். பலரோடும் உரையாடினேன். பிரிட்டன் நாட்டில் உரிமை உணர்வு எல்லா மட்டத்திலும் செயல்படக் கண்டேன். தொடக்கப் பள்ளிக்கோ, உயர்நிலைப் பள்ளிக்கோ குறிப்பிட்ட பொதுப் பாடத் திட்டம் கிடையாது. பள்ளி இறுதித் தேர்வில் என்னென்ன பகுதிகளில் அறிவு எதிர் பார்க்கப்படுகிறது, என்பதை மட்டும் அறிவித்து உள்ளனர். அந்த எல்லைக்கோட்டை மனத்தில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பள்ளிக்கூடமும், அதன் சுற்றுச்சூழல், மாணவர்களின் பின்னணி ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு வகுப்புக்கும் தாங்களே பாடத் திட்டத்தை வகுத்துக் கொள்வார்கள். பிரிட்டானிய ஆசிரியர் சமுதாயத்தின் கடமை உணர்வு உலகப் புகழ் பெற்றது. அதை ஆசிரியர்கள் கட்டிக் காத்து வருகிறார்கள். அவர்கள் உரிமை தொடர்வதற்குத் தடையாகப் பொது மக்கள் குறுக்கிடுவதில்லை. பள்ளிகளுக்கே பாடத் திட்டங்களை வகுத்துக்கொள்ளும் உரிமை இருக்கும்போது பல்கலைக் கழகங்களுக்கும் அந்த உரிமை இருப்பது வியப்பல்ல. பல்கலைக் கழக வளர்ச்சிக்கும் புதிய திட்டங்களுக்கும் அரசின் நிதி உதவி வழங்க முறை செய்திருக்கிறார்கள். அப்படி உதவும் போதும் பல்கலைக் கழகத்தின் உரிமையில் அரசு தலையிடுவது இல்லை.