தமிழகத்தில் பொது நூலக இயக்கம் 555 இத்தகைய முயற்சிகளால் எனது பதவிக் காலத்தில் கிளை நூலகங்களின் எண்ணிக்கையை ஒன்றிலிருந்து 400க்கு மேல் உயர்த்த முடிந்தது. பல மாவட்டத் தலைநகரங்களில் மைய நூலகத்திற்கு நல்ல கட்டடங்கள் கட்ட முடிந்தது. அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் கட்டடம் அவற்றில் ஒன்றாகும். அதைக் கட்டி முடித்த மாவட்ட நூலகத் தலைவர் திரு. வி. என். சுப்பராயன். அவர் சென்னை மாநகராட்சியின் ஆணையராகச் சிறந்த பணியாற்றி ஒய்வு பெற்றபின், நூலகத் தொண்டை ஏற்றுக் கொண்டார். மேற்படி நூலகத்தின் அடிமனையை வாங்குவதற்கு இயக்குநராகிய நானும் உதவி செய்ய நேர்ந்தது. ஒருநாள் பெருந்தொழிலதிபராகிய திரு. ஆனந்தராம கிருஷ்ணன் நூலக ஆணைக்குழுத் தலைவராகிய திரு. வி. என். சுப்பராயனைத் தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசினார். "ஐயா, சென்னை மலைச் சாலையில் (பழைய பெயர்) காலி மனை ஒன்று விற்பனைக்கு வந்திருக்கிறது. அதன் உரிமையாளர் என்னை அணுகி அதை வாங்கிக்கொள்ளும்படி கேட்டார். நான் இரண்டு மூன்று நாள்களில் பதில் சொல்வதாகவும், அதுவரை எவரிடமும் கேட்க வேண்டாமெனவும் சொல்லி அனுப்பினேன். அதன்விலை இரண்டரை லட்சம். "நீங்கள் நூலக ஆணைக் குழுவுக்கு இடந்தேடிக் கொண்டிருந்தது, எனக்குத் தெரியும். நூலகக் குழுவிற்காக அதை வாங்கினால் அது பொது நன்மைக்குப் பயன்படும். “எனவே உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். அந்த இடத்தைப் போய்ப் பாருங்கள். “உங்களுக்குப் பிடித்தால் நான் விலை பேசி முடித்துத் தருகிறேன். அதுவரை இது ரகசியமாக இருக்கட்டும்” என்று திரு. அனந்தராமகிருஷ்ணன் கூறினார். மேற்படி பேச்சு நடந்த நாளன்று நான் சென்னையில் இருந்தேன். திரு. வி. என். சுப்பராயன் உடனே என்னிடம் வந்து கலந்து பேசினார்.