பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 / புத்தரின் வரலாறு

"நிப்புதா நூன ஸா மாதா
நிப்புதோ நூன் ஸோ பிதா
நிப்புதா நூன ஸா நாரீ
யஸ்ஸா யங் ஈதிஸோ பதி."

இவரை மகனாகப் பெற்ற தாய் மகிழ்ச்சியுள்ளவள். இவரை மகனாகப்பெற்ற தந்தை மகிழ்ச்சியுள்ளவர். இவரைக் கணவனாகப் பெற்ற மங்கை மகிழ்ச்சியுள்ளவள் என்பது இப்பாட்டின் கருத்தாகும்.

இவ்வாறு கிரிசா கௌதமி பாடியதைக்கேட்ட சித்தார்த்த குமாரன், உலகத் துன்பங்களிளின்று விடுதலை பெறக் கருதிக் கொண்டிருப்பவர் ஆதலின் இப்பாடலுக்கு இவ்வாறு பொருள் கொண்டார்: காமம், பகை, இறுமாப்பு, பொய்க்காட்சி முதலிய நிப்புதம் (தீ) அவிந்தால், நிர்வாண மோக்ஷம் என்னும் இன்பம் உண்டாகும். இவ்வாறு தமக்குள் வேறுபொருள் கருதிய இவர், இத்தகைய நினைப்பை உண்டாக்கிய கிரிசா கௌதமிக்கு நன்கொடை வழங்கக்கருதி. தமது கழுத்தில் அணிந்திருந்த ஆயிரக்கணக்கான பொன் மதிப்புள்ள முத்துமாலையைக் கழற்றி ஒரு ஆளிடம் கொடுத்து அவளுக்கு வழங்கினார். சித்தார்த்த குமாரன் அனுப்பிய முத்துமாலையை ஏற்றுக்கொண்ட கௌதமி, அவர் தன்னைக் காதலித்ததாகக் கருதிக் கொண்டாள்.

பூஞ்சோலையிலிருந்து தகர்வலமாக அரண்மனைக்குவந்த சித்தார்த்த குமாரன் அரண்மனையையடைந்து தேரை விட்டிறங்கி அரண்மனைக்குள் சென்று ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது, தேவலோகத்து மங்கையரைப் போன்று அழகு வாய்ந்த பெண்கள், நல்ல ஆடையணிகளை அணிந்து கண்ணையும், கருத்தையும் கவரும் இனிய தோற்றம் உடையவராக அவ்விடம் வந்து இசைக் கருவிகளை வாசித்தும் நடனம் ஆடியும் இசை பாடியும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினார்கள். ஆனால், மக்களின் துன்பங்களைக் கண்டு வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டிருந்த சித்தார்த்த குமாரனுக்கு இவர்கள் நிகழ்த்திய ஆடல் பாடல்களில் மனம் செல்லவில்லை. இவர்களின் ஆடல்கள் அவர் கண்ணைக் கவரவில்லை. இனிய பாடல்கள் செவிக்கு இன்பம் ஊட்டவில்லை. ஆகவே சித்தார்த்த குமாரன் உலக வாழ்க்கையை வெறுத்தவராய் கட்டிலிற்படுத்து உறங்கிவிட்டார். அரச குமாரன் கண்ணுறங்கியதைக் கண்டு இளமங்கையர் தாம் நிகழ்த்திய ஆடல் பாடல்களை நிறுத்தி, இசைக் கருவிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவ்விடத்திலேயே தாங்களும் உறங்கிவிட்டார்கள்.