24
மேனகா
சாமாவையரோ தமது சொந்த நலத்தைக் கருதாது, அவர்களது நன்மையையே மனதிற் கொண்டவரைப்போல நடித்தாராயினும், தம்மிடமிருந்த ஒன்பதினாயிரத்தைந்நூறு ரூபாயையும் அப்படியே தமக்கு அருப்பணம் செய்து கொள்ள நினைத்தார். பங்களாவை தமது பேரில் விலைக்கு வாங்கி சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களை ஐந்தாறு மாதகாலம் அதில் குடியிருக்க விடுத்து, அதற்குள் அவர்களிடம் ஏதாவது முகாந்திரத்தை முன்னிட்டு சண்டையிட்டு பிரிந்துபோய், வக்கீல் மூலமாக நோட்டீசனுப்பி அவர்களை பங்களாவி லிருந்து வெளியேற்ற நினைத்திருந்தார். நிற்க, அவரது சொந்த ஊராகிய கோடாலிக் கறுப்பூராரான தமது நண்பர் ஒருவரது பெண்ணை வராகசாமிக்கு மறுமணம் புரிந்து விட்டு அதனால் ஏதாவது பொருள் சம்பாதித்துக் கொள்ளவும் நினைத்திருந்தார்.
வராகசாமி வைத்தியசாலைக்குச் சென்று ஒரு வாரமானது, கும்பகோணத்தில் குடியிருந்த சம்பந்தியிடம் சென்று, முகூர்த்த நாளை நிச்சயித்துக் கொண்டு, நாகைப்பட்டணம் போய் பங்களாவை விலைக்கு வாங்கிக் கொண்டு, விரைவில் வந்துவிடும்படி பெருந்தேவியம்மாள், கோமளம்மாள் ஆகிய இருவராலும் சாமாவையர் அனுப்பப்பட்டார். அவர், சென்னையிலிருந்து புறப்படும் ரயிலில் அன்றிரவு ஏறி மறுநாட் காலையில் கும்பகோணம் வந்து சேர்ந்தார். அவர் தமது வருகையைப்பற்றி முன்னாகவே தமது ஆப்த நண்பரான சம்பந்திக்குக் கடிதத்தின் வாயிலாக அறிவுறுத்தி யிருந்தார். ஆகவே, சம்பந்தி வரதாச்சாரியார் சாமாவையரது வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்.
வராகசாமியின் முதல்மாமனாரான சாம்பசிவையங்காரது குணத்தையும், முதல் மனைவியான மேனகாவின் குணத்தையும் நமது வாசகர்கள் நன்றா யறிவார்களல்லவா.
அவனுக்கு இரண்டாவது மாமனாராக வரப்போகும் வரதாச்சாரியாரின் நிலைமை, குணம் முதலியவற்றையும்,