72
மேனகா
முதலியவை அகன்றும், சுத்தமாகவும் இருந்தன. கூடத்தில் நாற்காலிகள், விசிப்பலகை, ஊஞ்சற்பலகை முதலியவை கிடந்தன. சுவரில் அழகிய படங்கள், மணியடிக்கும் பெருத்த கடியாரம், மான் தலைகள் முதலியவை காணப்பட்டன. கமலம் ஒரு சாய்வான நாற்காலியைக் காட்டி அதில் உட்காரும்படி அந்தரங்க அன்போடு சாமாவையரை வேண்ட, அவரும் களிப்படைந்து அதில் அமர்ந்து சுகமாகச் சாய்ந்துகொண்டார். கிழவி கண்ணாடி விளக்கை சுவரில் மாட்டிவிட்டு உட்புறம் சென்றாள். உடனே கமலம், “இதோ வந்துவிட்டேன்” என்று சாமாவையரிடம் கூறிவிட்டு உட்புறம் நுழைந்தாள். தாயும் மகளும் இரண்டாம் கட்டிற்குள் ஒரு தனிமையான இடத்திற்குச் சென்றனர். அங்கு தாயினிடம் மகள், நடந்த விவகாரங்களை யெல்லாம் ஒளியாமல் கூற, அவள் பெரிதும் சந்தோஷ மடைந்தவளராய், “அப்படியானால் பவுன்களும், ரூபாயும் எவ்வளவிருக்கும்?” என்றாள். கிழவி சிறிது யோசனை செய்து, “இதுவும் நம்முடைய பாக்கியந்தான்! ஸ்ரீதேவி நம்முடைய வீட்டைத் தேடி வந்திருக்கிறாள். ஆளைப் பார்க்கையில் டம்பாச்சாரியைப்போல விருக்கிறது. இந்த விஷயங்களில் நன்றாக அடிபட்டவனாகத்தான் இருக்க வேண்டும். இவன் எளிதில் ஏமாற மாட்டான். அதிருக்கட்டும்; நாம் தாசித் தொழில் செய்கிறவர்கள் என்பதைச் சொன்னாயா?” என்றாள்.
கமலம்:- இல்லை; இல்லை. குடும்ப ஸ்திரீ போலவும் அவருடைய அழகைக் கண்டு மோகித்தவள் போலவும் நடித்து அழைத்து வந்தேன்; மனிதனும் அப்படியே சொக்கிப்போய் வந்திருக்கிறான். நாம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தடையில்லை.
கிழவி:- அடிபோ பைத்தியமே! இந்தத் தொழிலில் இந்த மாதிரி தவித்த எத்தனையோ ஆள்களை நாம் பார்த்தாகி விட்டது; முதல் ஆவேசத்தில் இப்படித்தான் தாராளமாக