100 - - கம்பர் சாது சக்கரன் தனையான் ஊட்டிய காலம் போல்வதோர் கனாமயக் குற்றேன் ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய் ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது, என்ற மணிமேகலைப் பகுதியில் உயிர் போகுங் காலத்து விருந்து நினைவு வந்ததனால் அமுதசுரபி மணிமேகலைக்கு மறுபிறப்பில் கிடைத்தது என்று அறிகின்றோம். சாகும் போது உள்ள எண்ணம் மீண்டு பிறக்கம் போதும் தோன்றும் எனின், சீதை யெண்ணத்தோடு இராவணன் மாண்டான் எனின், காப்பியம் தூய்மையாகுமா? காப்பியத் தலைவிக்குத் தீயவனிடத்திலிருந்து விடுதலை இல்லையா? இராவணன் சீதை நினைவு இன்றியே போருக்குப் போனான் என்று அமைப்பது காப்பியக் கடன். அக்கடமையை மறவாது உரிய இடத்துத் திறம்படப் பாடினார் கம்பர். சீதையை விடுதலை செய்வதற்காகவே மண்ட்ோதரிக் களத்தை அமைத்து இராவணனைத் தூய்மையாக்கினார். - கள்ளிருக்கும் மலர்க்கூந்தற் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி, என்பது மண்டோதரியின் முடிவுப் புலம்பல். இராவணன் உடலை இராகவன் அம்பு இவ்வளவு ஏன் துளைத்தது? சீதைக் காதலெண்ணம் அக் காமுகன் நெஞ்சில் இன்னும் எங்காவது ஒட்டியிருக்கின்றதோ என்று காணத் துளைத்தது போலும். இதனால் மூன்று நலங்கள் உண்டாகின்றன. சீதை விடுதலை பெறுகின்றாள். இராவணன் வீரனாகின்றான். இராகவன் வீரனைக் கொல்கின்றான். இராம காப்பியம் கற்புக் காப்பியமாகவும், வீரக் காப்பியமாகவும் உயர்கின்றது. காப்பியக்கம்பர் தீயவனையும் தூயவனாக்கிக் காப்பியத் தலைவனையும் தலைவியையும் உயர்த்துகின்றார். 'ஒருவன்வாளி என்ற இறுதித் தொடர் புதுக்குறிப்புக் காட்டுவது.ஒப்பற்ற வன்மையான அம்பு என்பது பொருள். வல்வில் ஓரி என்பது போல 'வன் என்பது வாளிக்கு அடை. ஏனை அம்புகள் உடலைத் தான் துளைக்கும். இராமன் விடுத்த அம்போ இராவணன்தன் உடலுக்குட்புகுந்து அகத்தையும் துளைத்துக் காதலெண்ணத்தையும் தடவிப் பார்த்தது என்பதனால், வன்வாளி' எனப் பாராட்டப்பட்டது. இவ்விடத்து இத் தொடருக்கு ஒப்பற்ற ஒருவனது அம்பு எனப் பொருள் கூறல் கவியுள்ளம் ஆகாது. வகரத்தின் முன் லகரம் னகரமாகத் திரியும் சிலவிடங்கள் உள. நன்வாயாகுதல், வென்வேலான் குன்று, வென்வேற்கிள்ளி என்ற ஆட்சிகளைக் காண்க